ஜெயலலிதா நினைவிடத்தில் விடிய விடிய அஞ்சலி செலுத்திய மக்கள்... கண்ணீர் கடலானது மெரீனா !
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள்.
சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்தும் ஏராளமான பொதுமக்கள், அதிமுக தொண்டர்கள் வந்து அஞ்சலி செலுத்தி செல்கின்றனர்.
மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் செவ்வாய்க்கிழமை மாலை 6.10 மணி அளவில் எம்.ஜி.ஆர் சமாதிக்கு அருகே ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. நல்லடக்கம் செய்யப்பட்ட நேரத்தில் ஆளுநர், மத்திய அமைச்சர்கள், முக்கிய கட்சிகளின் அரசியல் தலைவர்கள் இருந்ததாலும், பாதுகாப்பு கருதியும் அடக்கம் நடந்த இடத்தின் அருகே பொது மக்கள் யாரும் அனுமதி அளிக்கப்படவில்லை.
நல்லடக்கம் முடிந்த பின்னர், செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணியில் இருந்தே பொது மக்கள் அதிகளவு வரத் தொடங்கினர். குழந்தைகள், பெண்கள் என குடும்பம் குடும்பமாக வந்து ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தைப் பார்த்து சோகத்தில் மூழ்கினர். ஜெயலலிதாவின் முகத்தை இறுதியாக நேரில் பார்த்து அஞ்சலி செலுத்த முடியாத பலரும், ஜெயலலிதாவை அடக்கம் செய்த இடத்தில் விடிய விடிய அழுதனர்.
தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்திற்கு வந்து மலர்களை தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவர்களோடு சென்னை நகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனால் மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் காணப்படுகின்றனர். கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை சுற்றிலும் தடுப்பு கம்பி வைக்கப்பட்டது.
ஏராளமான தொண்டர்கள் மொட்டை அடித்து தங்கள் அஞ்சலியைச் செலுத்தி வருகிறார்கள். ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பெண் தொண்டர்கள் பலரும் மொட்டை அடித்து அஞ்சலி செலுத்தினர். பலர் ஜெயலலிதாவை அடக்கம் செய்துள்ள இடத்தின் அருகே அமர்ந்து அழுதனர். மக்கள் கூட்டம் கடற்கரை சாலையில் அதிகம் வந்ததால் சாலையில் சிறிது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பொதுமக்கள் உள்ளே செல்வதற்கும், வெளியே வருவதற்கும் தனித்தனியே வரிசை என. போலீஸ் தடுப்புகள் மூலமாக பாதைகள் அமைக்கப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள், அலுவலர்கள் சுமார் 500 பேர், தலைமை செயலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று முதலமைச்சரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்திற்கு சென்று நேற்று அஞ்சலி செலுத்தினர். ஜெயலலிதாவுக்கும் நினைவிடம் அமைக்கும் பணிகளையையும் பொதுப்பணித் துறையினர் மேற்கொண்டுள்ளனர். இதற்கான ஆய்வுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.