கலாம் மறைவால் ஆதரவற்றுப் போன ஆயிரக்கணக்கான புத்தகங்கள்: உதவியாளர் கண்ணீர்
ராமேஸ்வரம்: மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மறைவால் அவரது ஆயிரக்கணக்கான புத்தகங்கள் ஆதரவற்றுவிட்டன என அவரது உதவியாளர்களில் ஒருவரான தாஸ் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலைச் சேர்ந்த தாஸ், கடந்த 8 ஆண்டுகளாக அப்துல் கலாமின் உதவியாளராகப் பணி புரிந்து வந்தவர். கலாம் ஷில்லாங் செல்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் விடுமுறையில் ஊருக்குச் சென்றுள்ளார்.
ஷில்லாங் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலாம் மாரடைப்பால் திடீரென காலமான செய்தி அறிந்து, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ராமேஸ்வரம் வந்திருந்தார் தாஸ். அப்போது தி இந்து நாளிதழுக்கு அவர் சிறப்புப் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
6 பேர்...
அப்துல் கலாம் அலுவலகத்தில் அவருடைய ஆலோசகர், தனி செயலாளர்கள், தனி உதவியாளர்கள் உட்பட 6 பேர் பணிபுரிந்து வந்தோம். அதில் நானும், இன்னொருவரும் மட்டும் அவரது பக்கத்து அறையிலேயே தங்கியிருப்போம். மற்றவர்கள் அனைவரும் அலுவலக நேரம் முடிந்ததும் வீட்டுக்குப் போய்விடுவார்கள். எங்களுக்கு கலாமின் அலுவலகம்தான் வீடு.
வெரிகுட்... தேங்க்யூ
அவருடன் 24 மணி நேரமும் உடனிருப்பேன். சிறு உதவி செய்தாலும், ‘வெரி குட்', ‘தேங்க் யூ' ஆகிய வார்த்தைகளை புன்முறுவலுடன் சொல்லுவார். அவர் வாழ்க்கையில் மிக அதிகமாக பயன்படுத்திய வார்த்தைகள் என்றால் அவைதான்.
மரியாதையாக...
மிகச்சாதாரண கீழ்நிலை உதவியாளரான என்னை மட்டுமின்றி எல்லோரையும் சார் என்று மரியாதையாக அழைப்பார்.
பாக்கியத்தை இழந்தேன்...
அவர் மேகாலயா செல்வதற்கு 2 நாட்களுக்கு முன்புதான் விடுமுறை எடுத்துக் கொண்டு ஊருக்கு வந்தேன். இதனால் 24 மணிநேரமும் உடனிருக்கும் நான், அவரது இறுதிக்காலத்தில உடனிருக்கும் பாக்கியத்தை இழந்துவிட்டேன்.
மாபெரும் இழப்பு...
குடியரசுத் தலைவராக இருந்தபோதும் சரி, அதன்பிறகும் சரி குடும்பத்தினரை தன்னுடன் தங்க வைத்துக் கொண்டதில்லை கலாம். ஆனால், எங்களை குடும்பத்தினர் போல நடத்தினார். அவரது மறைவால் மிகப்பெரிய இழப்பு எங்களுக்குத்தான்.
ஆதரவற்ற புத்தகங்கள்...
எப்போதும் புத்தகம் படித்துக் கொண்டிருப்பார் கலாம். அவரது மறைவால் ஆயிரக்கணக்கான புத்தகங்களும் ஆதரவற்ற நிலைக்கு வந்துவிட்டன" என கண்ணீருடன் அவர் தெரிவித்துள்ளார்.