ஆருத்ரா தரிசனம்: சிவ ஆலயங்களில் நடராஜபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள்!
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் நடைபெற்ற ஆருத்ர தரிசன விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று தேரோட்டம் நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சித்சபையில் இருந்து தேரில் எழுந்தருளினார். காலை 6 மணி அளவில் தேர்நிலையை அடைந்தது.
இன்று (புதன்கிழமை) அதிகாலை சுவாமிக்கு மகா அபிஷேகம், புஷ்பாஞ்சலி திரு ஆபரண அலங்கார காட்சி, சொர்ணாபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நண்பகல் 12 மணிக்கு பஞ்சமூர்த்தி வீதி உலா நடந்தது.
அதன்பின்னர் 2.30 மணியளவில் சிவகாம சுந்தரி சமேத நடராஜர் சுவாமிகள் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் உள்ள நடன பந்தலில் 3 முறை முன்னுக்கு பின்னுமாக நடனமாக பக்தர்களுக்கு ஆருத்ரா தரிசன காட்சி அளித்தார்.
இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று ஆருத்ரா தரிசனம் கண்டனர். இதையடுத்து சித்சபை பிரவேசம் நடைபெற்றது. நாளை (வியாழக்கிழமை) முத்து பல்லக்கு உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
தஞ்சையில் தரிசனம்
இன்று ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு தஞ்சாவூர் பெரிய கோவிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜபெருமானுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடந்தது. இதில் விபூதி, திரவிய பொடி, மஞ்சள் பொடி, பஞ்சாமிர்தம், தேன் மற்றும் நெய், பால், தயிர், பழவகைகள், கரும்புச்சாறு, இளநீர், சந்தானம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகங்கள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
உத்தரகோசமங்கை
ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு பச்சை மரகத நடராஜர் பெருமானுக்கு சந்தனகாப்பு கலைத்து,அபிஷேகம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
சென்னையில் ஆருத்ரா தரிசனம்
சென்னை மயிலாப்பூரில் உள்ள சிவ ஆலயங்களான காரணீஸ்வரர், விருப்பாக்ஷீஸ்வரர், மல்லீஸ்வரர், வாலீஸ்வரர், கபாலீஸ்வர்ர், வெள்ளீஸ்வரர் ஆலயங்களில் நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற்றன. ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.