கூவத்தூர் ரிசார்ட்டை சுற்றி 1000 போலீசார் குவிப்பு.. பதட்டம் !
அதிமுக எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள கூவத்தூர் ரிசார்ட்டை சுற்றி ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள கூவத்தூர் சொகுசு ரிசார்ட்டை சுற்றி 1000 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுகவில் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என்று இரு அணி உருவாகியுள்ளது. ஓபிஎஸ் பக்கம் பலரும் சென்று வருவதால் சசிகலா அணி அதிர்ச்சி அடைந்துள்ளது. முதல்வர் நாற்காலியில் ஒரு நாளாவது உட்கார்ந்துவிட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் இருக்கிறார் சசிகலா.
இதற்காக ரிசார்ட்டில் எம்எல்ஏக்களைப் பார்த்து சமாதானமாக பேசி வருகிறார். ஒரே குடும்பம், ஓபிஎஸ் பக்கம் மட்டும் சென்று விட வேண்டாம் என்று பேசி வருகிறார் சசிகலா. இதனிடையே மூன்றாவது முறையாக ரிசார்ட்டுக்கு வந்த சசிகலா நேற்று அங்கேயே தங்கியுள்ளார்.
இதையடுத்து, கூவத்துாரில் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் இருக்க ஐ.ஜி. தாமரை கண்ணன் தலைமையில் 2 எஸ்.பி.,க்கள் உட்பட 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார் பாதுகாப்பை மேற்கொண்டு வருகின்றனர். திடீரென போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.