தசரா கோலாகலம்- குலுங்கியது குலசேகரப்பட்டிணம்!
உடன்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டிணம் தசரா விழாவில் நள்ளிரவு சூரசம்ஹரம் நிகழ்ச்சி நடந்தது. இதனால் குலசேகரப்பட்டிணம் பக்தர்களால் நிரம்பி வழிந்தது.
மைசூருக்கு அடுத்தப்படியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் கோவில் தசரா விழா பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு தசரா விழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவையொட்டி தினமும் சிறப்பு பூஜையும், அம்பாள் வீதி உலாவும் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹரம் நள்ளிரவு நடந்தது. இதையொட்டி காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. நள்ளிரவு 12 மணி்க்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்ரேஸ்வரர் கோயிலுக்கு முன்பாக எழுந்ருளினார். அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். அவர்கள் மத்தியில் அம்பாள் சூரனை வாதம் செய்தார்.
இன்று 15ம் தேதி காலை 6 மணிக்கு பூ சம்பரத்தில் அம்பிகை திரு வீதா புறப்பட்டார். பகல் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. மாலை 5.30 மணி்க்கு அம்பாள் கோயிலுக்கு வந்து சேருகிறார்.
தொடர்ந்து மாலை 6 மணிக்கு விரதம் இருந்த பக்தர்கள் விரதம் முடித்து காப்பு களைதல் நிகழ்ச்சி நடக்கிறது. 16ம் தேதி பகல் 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது. மேலும் பாலபிஷேகமும் நடக்கிறது.
தசரா விழாவையொட்டி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குலசேகரப்பட்டிணத்தில் குவிந்தனர். பக்தர்கள் பலரும் பல்வேறு வேடங்கள் அணிந்து குலசை முழுவதும் வலம் வந்தனர். லட்சக்கணக்கான பக்தர்கள் வருகையால் குலசேகரப்பட்டிணம் திணறியது.