ஜில்லுன்னு கொட்டும் தண்ணீர்.. குளுகுளு குற்றாலம்.. ஐந்தருவியில் மக்கள் கொண்டாட்டம்
நெல்லை: குற்றாலத்தில் சீசன் களைகட்டத் துவங்கியுள்ளது. ஜில்லுன்னு ஐந்தருவியில் கொட்டும் தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.
தமிழக கேரளா எல்லையான மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் தென்மேற்கு பருவமழை காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் சீசன் காலமாகும்.
இக்காலங்களில் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் ஆனந்த குளியல் நடத்த மக்கள் குவிவார்கள். இந்த சீசன் நாட்களில் சுமார் 60 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.
தற்போது மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர் பகுதியில் பெய்த மழையின் காரணமாக குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பாரித்து கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் ஆனந்தமாக குளித்துச் செல்கின்றனர். ஐந்தருவில் கூட்டம் அதிகமாக உள்ளதால் பெண்கள் பகுதியில் மட்டும் வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இன்று விடுமுறை தினம் என்பதால் எராளமான சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது. மேலும் வாகன நெருக்கடியால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதனால் பொது மக்கள் சிரமம் அடைந்தனர். நாளையும் விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீசன் களைகட்ட துவங்கியுள்ளதால் ஐந்தருவி அருகே உள்ள வெண்ணமடை குளத்தில் படகு சவாரி விரைவில் துவங்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை தமிழ் நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் மேற்கொண்டு வருகிறது.