சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் இன்று தேரோட்டம்! நாளை ஆருத்ரா தரிசனம்
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன உற்சவ தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்காக பக்தர்கள் பங்கேற்று திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
சிவபெருமானின் பஞ்ச தலங்களில் ஆகாய தலமாக போற்றப்படுவது சிதம்பரம். இங்கு ஆண்டுதோறும் ஆனித்திருமஞ்சனம், மார்கழி மாத அருத்ரா தரிசனம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
ஸ்ரீநடராஜர் கோயிலில் கடந்த டிச.9 தேதி கொடியேற்றத்துடன் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் தொடங்கியது. விழாவின் முக்கிய அம்சமான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர்களை இழுத்தனர்.
9-ம் நாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்த்திருவிழாவை முன்னிட்டு சித்சபையில் உள்ள மூலவர்களான ஸ்ரீமந் நடராஜமூர்த்தி, ஸ்ரீசிவகாமசுந்தரி மற்றும் உற்சவர்கள் ஸ்ரீசுப்பிரமணியர், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசண்டிகேஸ்வரர் ஆகியோர் தனி தனி தேர்களில் எழுந்தருளினர். பின்னர் கீழவீதி தேரடி நிலையிலிருந்து தேர்கள் புறப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர்கள் தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக மாலை 5 மணிக்கு கீழவீதி தேர்நிலையை அடைந்தன.
விழாவின் முக்கிய அம்சமான ஆருத்ரா தரிசனம் புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்குள் நடைபெறுகிறது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிதம்பரத்தில் குவிந்துள்ளனர். பக்தர்களுக்காக பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.