மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருகல்யாணம் கோலாகலம்: கண்குளிர தரிசித்த பக்தர்கள்
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் நிகழ்வான மீனாட்சி சுந்ரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று திருக்கல்யாண நிகழ்வினை பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா கடந்த10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் தினமும் காலை, இரவு மாசி வீதிகளில் பல்வேறு வாகனங்களில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
விழாவின் 8ம் நாளான ஞாயிறன்று இரவு மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. அன்று முதல் மதுரையின் அரசியாக மீனாட்சி திகழ்கிறார். 9ம் நாளான நேற்று இரவு மீனாட்சி அம்மன் திக்விஜயம் செய்தார்.
10ம் நாளான இன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் சேர்த்தி மண்டபத்தில் மீனாட்சி, சுந்தரேஸ்வரர் மணமக்களுக்கான அலங்காரத்தில் ஜொலித்தனர். அங்கிருந்து பழைய திருமண மண்டபம் அழைத்து வரப்பட்டனர். திருப்பரங்குன்றம் முருகன்-தெய்வானை, பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோரும் காலை 5.00 மணிக்கு கோயில் வந்து சேர்ந்தனர்.
சுவாமி, அம்மனுக்கு ஐவகை தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து, மணமக்களின் பிரதிநிதிகளாக வேடமிட்ட இரு சிவாச்சாரியார்களுக்கு வேஷ்டி, பருப்புத் தேங்காய், பூணூல், பணம் வழங்கப்பட்டது.
அம்மனுக்கும், சுவாமிக்கும் பட்டு வஸ்திரம் சாத்தப்பட்டு, இருவரும் மணக்கோலத்தில் சித்திரை வீதிகளில் வலம் வந்தனர். மேலக்கோபுர வாசலில் அம்மன், சுவாமி இருவருக்கும் பாதபூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து ஊஞ்சல் ஆடிய பின்னர் தீபாராதனை நடந்தது.
மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை, திருப்பரங்குன்றம் முருகன், பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோர் புறப்பட்டு ஆடி வீதிகளின் வழியாக திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளினர். திருக்கல்யாணத்திற்காக வடக்கு - மேற்கு ஆடி வீதி சந்திப்பில் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்த மணமேடைக்கு மீனாட்சியம்மன், சுவாமி பட்டாடை ஜொலிக்க வந்தனர்.
பின்னர் வேதமந்திரங்கள் முழங்க காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுவாமி பிரதிநிதி, அம்மன் பிரதிநிதி ஆகியோருக்கு காப்பு கட்டப்பட்டது. அதன் பிறகு இவர்கள் மாலை மாற்றும் நிகழ்வு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அம்மன், சுவாமிக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன் கழுத்தில் வைர திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து பிரியாவிடைக்கும் திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் தங்கள் கையில் இருந்த மலர்களைத் தூவி வணங்கினர்.
இதனை தொடர்ந்து தங்கத்திலான சந்தன கும்பத்தில் இருந்த சந்தனம் எடுத்து திருமாங்கல்யத்தில் வைக்கப்பட்டது. இதே போன்று பன்னீர் தெளிக்கப்பட்டு தங்க தட்டில் சூடம் ஏற்றப்பட்டு சுவாமிக்கு தீபாராதனை நடந்தது.
திருக்கல்யாணம் முடிந்ததும், அங்கு கூடியிருந்த பெண் பக்தர்கள் தங்கள் மாங்கல்யத்துக்கு புதிதாக மஞ்சள் கயிறு மாற்றிக் கொண்டனர். அம்மனும், சுவாமியும் மாலை மாற்றிக்கொண்ட பின், சிறப்பு பூஜை, ஆராதனைகள் நடந்தன.
பக்தர்களுக்கு திருமாங்கல்யப் பிரசாதமும் வழங்கப்பட்டது. இதற்கென கோயில் சார்பில் சுமார் 50ஆயிரம் மஞ்சள் கயிற்று திருமாங்கல்யம் வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மீனாட்சி திருக்கல்யாணத்தை தரிசனம் செய்ய கோயில் உள்ளேயும், வெளியிலும் லட்சக் கணக்கான பக்தர்கள் திரண்டனர். கோயிலுக்கு வெளியே ஆங்காங்கே அகன்ற திரையுடன் கூடிய டி.வி.க்கள் வைக்கப்பட்டிருந்தன.