வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் திருக்கோவில் சொர்க்கவாசல் திறப்பு!
திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கோவிலில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை தரிசனம் செய்தனர்.
108 வைணவ திருத்தலங்களில் முதன்மை தலமாக விளங்குவது திருச்சி ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கோவில். இங்கு, ஆண்டு தோறும் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.
இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி திருவிழா டிசம்பர் 31ம் தேதி தொடங்கியது. பகல் பத்து நிகழ்ச்சி நிறைவு நாளான நேற்று (10ம் தேதி) நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு, இன்று அதிகாலை நடைபெற்றது.
பரமபதவாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு விழா விமரிசையாக நடைபெற்றது.
அதிகாலை சரியாக 3.15 மணிக்கு ரத்ன அங்கி சேவையுடன் கிளி, மாலை அணிந்து மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள், 4.30 மணிக்கு திறக்கப்பட்ட சொர்க்க வாசலை கடந்து சென்றார்.
அமைச்சர்கள் பங்கேற்பு
விழாவில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ், வனத்துறை அமைச்சர் ஆனந்த் எம்.பி.,குமார், மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ, இந்து அறநிலையத்துறை கமிஷனர் தனபால், இந்து அறநிலையத்துறை செயலாளர் கண்ணன், தலைமை அரசு தலைமை கொறாடா மனோகரன், பொள்ளாச்சி ஜெயராமன், அக்ரி்கிருஷ்ணமூர்த்தி மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். திருவிழாவையொட்டி பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.
பரமபத வாசல் தரிசனம்
இதையடுத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பரமபதவாசல் வழியாக சென்று பெருமாளை தரிசித்து சென்றனர். இதனைத் தொடர்ந்து முத்துப்பந்தலில் நம்பெருமாள் பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்து வருகிறார். இன்று இரவு வரை பெருமாளை பக்தர்கள் தரிசிக்கலாம்.
பார்த்தசாரதி கோவிலில்
இதேபோல், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோவில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
மாதவப் பெருமாள் கோவில்
மயிலாப்பூரில் உள்ள மாதவப் பெருமாள் கோவிலில் அதிகாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
நவதிருப்பதியிலும் தரிசனம்
இதேபோல தென்காசியில் உள்ள பெருமாள் கோவிலில் நடைபெற்ற சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் அதிகாலை நேரத்தில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல திருப்பதி, ஸ்ரீவில்லிப்புத்தூர், , தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள நவதிருப்பதி கோயில்களிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
திருவட்டாரு பெருமாள்
திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவில் இன்று வைகுண்ட ஏகாதசியையொட்டி அதிகாலை 2.30 மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. அதிகாலை முதலே பக்தர்கள் பெருமளவில் வருகைதந்து நீண்ட வரிசையில் நின்று பெருமாளை வழிபட்டனர். காலை சிறப்பு அபிஷேக ஆராதனைக்குப் பின்னர் பக்தர்கள் ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி மூன்று வாயில்கல் வழியாக பகவானை தரிசித்தனர்.