நாகர்கோவிலில் முதல்வர் திறந்து வைத்த பிறகும், பூட்டியே கிடக்கும் மலர் வணிக வளாகம்!
முதல்வர் திறந்துவைத்தும் பயனின்றி பூட்டியே கிடக்கும் மலர் வணிக வளாகத்தினால் வியாபாரிகள் கவலையடைந்து உள்ளனர்.
நாகர்கோவில்: நாகர்கோவிலை அடுத்த தோவாளையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்த மலர் வணிக வளாகக் கட்டிடம் இன்னமும் பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே கிடப்பதால் வியாபாரிகள் கவலை அடைந்து உள்ளனர்.
நாகர்கோவிலை அடுத்த தோவாளை மலர் சந்தை வியாபாரிகளின் வசதிக்கு ஏற்ப அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுபடி, கட்டப்பட்டு தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் திறந்துவைக்கப்பட்ட வைத்த மலர் வணிக வளாகம் பயன்பாட்டுக்கு வராமல் பூட்டியே கிடக்கிறது.
தோவாளை மலர்ச் சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பூக்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இங்கிருந்து கேரளம் உள்பட வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் சென்ட் தொழிற்சாலைகளுக்கும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இங்கு வியாபாரிகளின் வசதிக்காக வணிக வளாகம் கட்ட வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை இருந்தது. இதையடுத்து கடந்த 2015ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தோவாளையில் ரூ.3 கோடியில் மலர் வணிக வளாகம் கட்ட உத்தரவிட்டார்.
அதன்படி கட்டி முடிக்கப்பட்ட புதிய வணிக வளாகத்தை கடந்த 30ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி தோவாளை மலர் வணிக வளாகத்துக்கு பாரத ரத்னா எம்.ஜி.ஆர். மலர் வணிக வளாகம் எனவும் பெயர் வைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
வழக்கமாக முதலமைச்சர் திறந்து வைக்கும் கட்டிடங்கள், வணிக வளாகங்கள் போன்றவை உடனடியாக செயல்பாட்டுக்கு வருவது வழக்கம். ஆனால் தோவாளையில் 75 கடைகளுடன் கட்டப்பட்ட வணிக வளாகம் முதல்வர் திறந்து வைத்த பின்னரும் மூடியே கிடக்கின்றன.
இந்த 75 கடைகளும் மொத்தம் 3 தொகுப்புகளாக கட்டப்பட்டுள்ளன. தரைத் தள கடைகளுக்கு தனி வாடகையும், மாடியில் உள்ள கடைக்கு தனி வாடகையும் நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. முறைப்படி இதற்கான ஏலத்தை நடத்தி கடைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
ஆனால் மாவட்ட நிர்வாகம் இதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் உள்ளது. வாடகை நிர்ணயம் செய்வதில் இரு வேறு கருத்துக்கள் உள்ளதால், இன்னும் தெளிவான முடிவு எட்டப்பட வில்லை என கூறப்படுகிறது. கடைகள் திறக்கப்படாததால் வியாபாரிகள் தற்போது வெளியே இருந்து தான் பூக்களை கட்டி அனுப்பி வருகிறார்கள். இதை உடனடியாகப் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை வைத்து உள்ளனர்.