ஆலையை மூடாமல் மக்களை கொன்று குவித்த தமிழக அரசு.. தவ்ஹீத் ஜமா அத் பாய்ச்சல்!
ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு பதிலாக மக்களை கொன்று குவித்த தமிழக அரசின் இந்த செயலானது மிகவும் கொடுமையானது என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் சார்பாக கண்டன அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் அந்த தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் துணை பொதுச்செயலாளர் முஹம்மது ஷில்பி கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு வலியுறுத்தி போராடிய மக்கள் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதின் விளைவாக இதுவரை ஒரு மாணவி உள்பட 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 60 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.ஜனநாயக வழியில் போராடிய மக்கள் மீது இரக்கமின்றி துப்பாக்கிச் சூடு நடத்தி மக்களை கொலை செய்திருக்கும் காவல்துறையின் செயல் வன்மையாகக் கண்டிக்கதக்கது.
ஸ்டெர்லைட் ஆலையினால் ஏற்படும் துன்பங்களை சந்திக்கும் மக்கள் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஒன்றுபட்டு போராடி வருகிறார்கள். மக்களுக்கு அழிவை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்குப் பதில் மக்களைக் கொன்றுக் குவிக்கும் தமிழக அரசின் செயல் மிகக் கொடுமையானதாகும்.
ஜனநாயக வழி போராட்டம் காவல்துறையால் திட்டமிட்ட வன்முறையாக மாற்றப்பட்டுள்ளது என்றே தோன்றுகிறது. ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை வீரியத்துடன் ஒருங்கிணைத்து நடத்தி சென்ற தோழர் தமிழரசன் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டிருப்பது காவல்துறையின் மீது சந்தேகத்தை மேலும் வலுக்க செய்கிறது. துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தமிழக அரசு முழு பொறுப்பேற்று, உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.தமிழக அரசு ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். நியாயமாக போராடும் மக்களுக்கு ஆதரவாக நாம் என்றும் துணையாக இருப்போம். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு முஹம்மது ஷிப்லி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.