நெய்வேலி அனல் மின் நிலையத்துக்கு அல்கொய்தா மிரட்டல்
நெய்வேலி: நெய்வேலி அனல் மின் நிலையத்துக்கு அல்கொய்தா தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவில் முக்கிய இடங்கள் மீது அல்கொய்தா இயக்கத்தினர் தாக்குதல் நடத்தலாம் என்று பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கல்பாக்கம் அணுமின் நிலையம் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அல்கொய்தா இயக்கம் மிரட்டல் விடுத்திருந்தது.
இந்த நிலையில் நெய்வேலி அனல் மின் நிலையத்துக்கும் அல்கொய்தா இயக்கம் மிரட்டல் விடுத்துள்ளது. இதுகுறித்து என்.எல்.சி நிர்வாகத்தினர் போலீஸாரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கூடுதலாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். சுரங்க தொழிலார்கள் அனைவரும் கடுமையான சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.