ராகுல், தமிழிசைக்கு மட்டுமல்ல... "தேர்தல் மன்னனுக்கும்" கொலை மிரட்டல்
சேலம்: போன் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதால், தனக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி சேலம் மாவட்ட ஆட்சியாளரிடம் தேர்தல் மன்னன் பத்மராஜன் புகார் அளித்துள்ளார்.
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கோனூர் பகுதியைச் சேர்ந்தவர் பத்மராஜன். பஞ்சர்கடை வைத்துள்ள இவரது லட்சியம் கின்னஸில் இடம் பெறுவது. இதனால், சாதனை முயற்சியாக தொடர்ந்து இவர் வேட்புமனுத் தாக்கல் செய்து வருகிறார்.
இதுவரை 174 முறை வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள இவரை, தேர்தல் மன்னன் என்றே மக்கள் குறிப்பிடுகின்றனர்.
கட்டுப்பாடு...
கடந்த 1996ம் ஆண்டு இவர் ஒரே சமயத்தில் 5 மாநிலங்களில் 8 தொகுதியில் போட்டியிட இவர் வேட்புமனு தாக்கல் செய்தார். இதனால், சுயேச்சை வேட்பாளர்களை கட்டுப்படுத்த ஒருவர் இரண்டு தொகுதியில் மட்டுமே போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதிமுறை வகுக்கப்பட்டது. இதேபோல, வைப்பு தொகையும் அதிகரிக்கப்பட்டது.
கின்னஸ் முயற்சி...
இவரின் இந்த தொடர் தோல்வி லிம்கா சாதனை புத்தகத்தில் 3 முறை இடம் பெற்றுள்ளது. தற்போது கின்னஸ் சாதனைக்காக தொடர்ந்து வேட்புமனுத் தாக்கல் செய்து வருகிறார்.
விஜயகாந்துக்கு போட்டியாக...
இந்த தமிழக சட்டசபைத் தேர்தலிலும் 174வது முறையாக உளுந்தூர்பேட்டையில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார் பத்மராஜன். இதுதவிர மேட்டூர் தொகுதியிலும் அவர் சுயேட்சையாக மனுத்தாக்கல் செய்துள்ளார். மேட்டூரில் பலூன் சின்னத்திலும், உளுந்தூர்பேட்டையில் தலைகவசம் சின்னத்திலும் போட்டியிடுகிறார்.
கொலை மிரட்டல்...
இந்நிலையில், உளுந்தூர்பேட்டையில் போட்டியிலிருந்து விலகுமாறு கடந்த சில நாட்களாக பத்மராஜனுக்கு தொடர்ந்து போன் மூலம் கொலை மிரட்டல் வந்தவண்ணம் உள்ளதாம்.
பாதுகாப்பு தேவை...
அதனைத் தொடர்ந்து தேர்தல் தொடர்பு பணிக்காக, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த பத்மராஜன், அம்மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனிடம், 'என்னுடைய உயிருக்கு பாதுகாப்பு இல்லை, பிரசாரம் செய்ய முடியாமல் தவிக்கிறேன், எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்' என்ற கோரிக்கை மனுவை வழங்கினார்.
தொடரும் மிரட்டல்...
முன்னதாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசைக்கும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அந்தப் பட்டியலில் பத்மராஜனும் சேர்ந்துள்ளார்.