விஷால் ரசிகன் / தொண்டனே இப்படி இருந்தா... 'தலைவர்' விஷால்?!
நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் வெற்றி பெற்று பொதுச் செயலாளராக அந்த நாற்காலியில் உட்காரும் முன்பே ஆரம்பித்தது சர்ச்சை. அதுவும் கடுமையான குற்றச்சாட்டுகளுடன்.
முதல் குற்றச்சாட்டு... விஷால் தனக்கு எதிராகரப் பேசியவர்கள், குற்றம்சாட்டியவர்களைப் பட்டியலிட்டு சங்கத்தை நீக்கி வருகிறார் என்பது. 'சத்தமில்லாமல் இந்த வேலை நடந்து கொண்டிருக்கிறது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் நீக்கப்பட்டுள்ளனர்' என்கிறார்கள் நடிகர் சங்க உறுப்பினர்கள். ஆனால் கேள்விகளுக்கு பதிலளிக்க நிர்வாகிகள் யாரும் தயாராக இல்லை. இதுகுறித்து எஸ்வி சேகர் அனுப்பிய ஏராளமான இமெயில்களுக்குக் கூட இதுவரை பதிலில்லையாம்.
ஒரு ஆண்டு முடிந்தது. தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வந்தது. இந்தத் தேர்தல் முடிந்து, தலைவராக வென்ற விஷால், அந்த நாற்காலியில் உட்காரும் முன்பே, எதிர்ப்பாளர்கள் லிஸ்ட் எடுக்கப்பட்டு, நீக்கப்பட உள்ளதாக பரபரப்பு கிளம்பியது. அதை நிரூபிக்கும் வகையில் ஆடியோ பதிவுகள் வலம் வந்தன. 'தலைவர் விஷால் உன்னை இன்னும் அரை மணி நேரத்தில் சங்கத்துக்கு வரச் சொன்னார். இல்லன்னா தூக்கிடுவாங்களாம்,' என்று ஒரு 'அழைப்பு'. அழைக்கப்பட்ட நபர் இருந்தது திருச்சியில். எப்படிங்க அரை மணி நேரத்தில் வர முடியும் என்று கேட்டு புலம்பி, ஒரு பதிவு வெளியிட்டார். இதன் உண்மைத் தன்மை என்ன என்று கேட்டபோது விஷாலோ அவர் தரப்போ பதிலே கூறவில்லை.
அடுத்து பாபு கணேஷ் என்ற தயாரிப்பாளர் விஷால் மீது அறக்கட்டளை தொடர்பாக புகார் அளிக்க, அந்த புகார் அளித்ததாலேயே அவரை தயாரிப்பாளர் சங்கக் கூட்டம் ஒன்றிலிருந்து வெளியேற விஷால் உத்தரவிட்டதாக புகார். அதற்கும் தெளிவான விளக்கம் இல்லை.
இப்படி நிறைய புகார்கள்.. சர்ச்சைகள். எதற்கும் தகுந்த பதிலை அவர் தரப்பில் சொல்லவில்லை என்கிறார்கள் மீடியாக்காரர்கள். இந்த நிலையில்தான் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆடியோ பதிவு மூலம் ஒரு ரவுடியைப் போல விஷால் ரசிகர் ஒருவர் மிரட்டிய நிகழ்வு நேற்று அரங்கேறியது. இன்று அது மீடியாவில் வைரலாகியுள்ளது.
"யாரோ ஒருவர் பேசியதற்கு விஷால் எப்படி பொறுப்பாக முடியும் என்ற கேள்வி எழலாம். நியாயம்தான். ஆனால் கடந்த காலங்களில் விஷால் மீது இதே போன்ற புகார்கள்தான் நிறைய வந்துள்ளன. எதிர்த்துக் கேட்டால் மிரட்டுகிறார்... எதிராகக் கருத்து சொன்னால் அவரது ஆட்கள் மிரட்டுகிறார்கள்... என்றெல்லாம் சொல்லப்பட்டன. இதனை விஷால் கட்டுப்படுத்தவும் இல்லை, பதில் அளிக்கவும் இல்லை.. ஆக தலைமை எவ்வழியோ, அவரைப் பின்பற்றும் ரசிகன் அல்லது நாளைய தொண்டனும் அப்படித்தானே இருப்பான்," என்கிறார் இயக்குநர் சுரேஷ் காமாட்சி.
இதுகுறித்து விஷாலின் கருத்தைக் கேட்க முயன்று வருகிறோம். பதில் கிடைத்ததும் வெளியிடுகிறோம்.