பணத்திற்காக கடத்தப்பட்ட தி.மு.க. பிரமுகர் மீட்பு; அட்டாக் பாண்டிக்காக கடத்தியதாக வாக்குமூலம்!
ராமேஸ்வரம் முத்துராமலிங்க தேவர் நகரை சேர்ந்தவர் வில்லாயுதம். இவர் நகர தி.மு.க. துணைச் செயலாளராக உள்ளார். இன்று காலை வில்லாயுதம் ஏற்கோடு பகுதியில் நடை பயிற்சி மேற்கொண்டிருந்திருந்த போது ஆம்னி வேனில் வந்த சில மர்ம நபர்கள் அவரை கடத்தி சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். இதையடுத்து, ராமேஸ்வரம், மண்டபம் மற்றும் உச்சிப்புளி பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, உச்சிப்புளி அருகே வில்லாயுதத்தை கடத்தி சென்ற காரை போலீசார் மடக்கியுள்ளனர். போலீசாரை கண்டதும் காரின் டிரைவர் கார்த்தி தப்பி ஓடி இருக்கிறார்.
காரில் இருந்த ராஜா என்ற ராஜமுருகன் மற்றும் மதுரையை சேர்ந்த வழிவிட்டான், முத்துமாரி ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். இதில், ராஜமுருகன் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது.
கடத்தப்பட்ட வில்லாயுதத்திற்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதால், தற்போது அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மூவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில், கமுதி அருகே உள்ள பெருநாழியை சேர்ந்த முருகபாண்டியன் என்பவர்தான், அட்டாக் பாண்டிக்காக 10 லட்சம் ரூபாய் கேட்டு வில்லாயுதத்தை கடத்த சொல்லி இருப்பது தெரிய வந்திருக்கிறது. இதை தொடர்ந்து முருகபாண்டியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும், இது தொடர்பாக ராமேஸ்வரம் கோவில் காவல் நிலைய போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.