சிதம்பரத்தில் குண்டு வெடித்த வழக்கு: அண்ணாமலை பல்கலை. ஊழியர் உட்பட 3 பேர் கைது
சிதம்பரம்: சிதம்பரத்தில் குண்டுவெடித்த வழக்கில் தலைமறைவாக இருந்த அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் உட்பட மூவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப உதவியாளராக பணிபுரிந்து வருகிறார் அருள் பிரசாத். இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் மாரியப்பாநகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று இவரது வீட்டில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் மோகன்ராம் என்பவர் படுகாயமடைந்தார். மோகன்ராமை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்த அருள் பிரசாத் தனது நண்பருடன் தலைமறைவானார்.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அருள் பிரசாத்தின் வீட்டை போலீசார் சோதனையிட்டதில், அங்கிருந்து டிபன் பாக்ஸ் குண்டு, 6 துப்பாக்கிகள், அரிவாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றினர்.
போலீசாரின் தேடுதல் வேட்டையில் அருள் பிரசாத் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் வெடிகுண்டு சம்பவத்திற்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது.
அதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய, பட்டாபி, சந்தோஷ் ஆகிய இருவரை தனிப்படை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.