தஞ்சாவூர்: டாஸ்மாக்கில் மது அருந்திய 3 பேர் பலி
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் வலங்கைமான் அருகே டாஸ்மாக்கில் மது அருந்திய 3 பேர் உயிரிழந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
வலங்கைமான் அருகே உள்ள கீழ் அமராவதியில் உள்ள டாஸ்மாக் கடையில் தேவேந்திரன், ராமச்சந்திரன், ஆனந்த் ஆகியோர் உள்பட 4 பேர் மது அருந்தியுள்ளனர்.
இந்நிலையில், மரு அருந்திய சிறிது நேரத்திலேயே தேவேந்திரன், ராமச்சந்திரன், ஆனந்த் ஆகியோர் வாந்தி எடுத்து மயங்கியுள்ளனர். உடனடியாக அவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்தனர்.
மேலும் ஒருவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசின் டாஸ்மாக் கடையில் மது அருந்தி மூன்று பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முசிறி பழைய பஸ் ஸ்டாண்ட்டில் உள்ள, டாஸ்மாக் கடையில், மது அருந்திய, பொதுப்பணித் துறை தற்காலிக ஊழியர் உட்பட, மூவர் பரிதாபமாக பலியாயினர்.
திருச்சியில் மூவர் பலி
கடந்த 14ஆம் தேதி திருச்சி மாவட்டம், முசிறி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள டாஸ்மாக் கடை பாரில் முசிறியை சேர்ந்த கணபதி, 37, பரிசல்துறை சாலையைச் சேர்ந்த, ஆட்டோ டிரைவர் செல்வம், 40, அந்தரப்பட்டி சாலையைச் சேர்ந்த, கணேசமுருகன், 38, ஆகியோர் மது அருந்தினர் மது குடித்துக் கொண்டிருந்த போதே, கணபதி மயங்கி விழுந்தார். கணபதியை, முசிறி அரசு மருத்துவமனைக்கு, செல்வத்தின் ஆட்டோவிலேயே கொண்டு சென்றுள்ளனர். கணபதி அங்கேயே சுருண்டு விழுந்து இறந்தார்.
சுருண்டு விழுந்து பலி
இதையடுத்து, செல்வம், கணேசமுருகன் ஆகியோர், கணபதி உடலை முசிறி அரசு மருத்துமனையிலேயே விட்டு விட்டு, மீண்டும் பழைய பஸ் ஸ்டாண்டுக்கு வந்துள்ளனர். அங்கு, கணேச முருகனை இறக்கி விட்ட செல்வம், கணபதி இறந்தது பற்றி தகவல் தெரிவிக்க ஆட்டோவிலேயே சென்றுள்ளார். கணேசமுருகன், மது குடித்த பாருக்கு அருகே வந்த போது, சாலையில் விழுந்து இறந்தார். தகவல் சொல்வதற்காக, கணபதி வீட்டுக்கு சென்ற செல்வம், முசிறி தீயணைப்பு நிலையம் அருகில், ஆட்டோவிலேயே மயங்கி விழுந்து இறந்தார்.
ஒரே மாதத்தில் 6 பேர் பலி
ஒரே மாதத்தில் டாஸ்மாக் மது குடித்து 6 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போதைக்காக குடிக்கும் மதுவே விஷமாக மாறி உயிரை கொல்வதால் குடிமகன்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.