பல ஆயிரம் கோடியில் சென்னையில் 3 உயர்மட்ட சாலை.. 6 மாதங்களில் பணி துவக்கம்.. எங்கே அமைகிறது தெரியுமா?
Recommended Video
சென்னை: சென்னையில் தாம்பரம்- செங்கல்பட்டு உட்பட 3 உயர்மட்ட சாலைகள் அமைக்கப் படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார். சாலை திட்டங்களுக்காக தமிழகத்திற்கு சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து துறை அமைச்சர் மந்திரி நிதின் கட்கரி சென்னையில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் மத்திய, மாநில அரசு அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். கூட்டம் முடிந்ததும் நிதின் கட்கரி நிருபர்களிடம் கூறியதாவது:
சென்னையில் போக்கு வரத்து நெரிசலை குறைப்பதற்காக ரூ.22 கோடி செலவில் தாம்பரம்-வண்டலூர் நடுவேயான சாலை மேம்படுத்தப்பட உள்ளது.
சென்னையில் உயர்மட்ட சாலை
அதேபோல, ரூ.50 கோடி செலவில் வண்டலூர்- கூடுவாஞ்சேரி இடையே சாலைகள் மேம்படுத்தப்படவுள்ளது. சென்னையில் 3 உயர்மட்ட சாலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.2,250 கோடி செலவில் தாம்பரம்- செங்கல்பட்டு, ரூ.1,500 கோடியில் பூந்தமல்லி-மதுரவாயல், ரூ.1,000 கோடியில் சென்னை புறநகர்-நங்கநல்லூர் இடையே உயர்மட்ட சாலை அமைக்கப்படும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை (டி.பி.ஆர்) 6 மாதங்களுக்குள் தயாரிக்கப்பட்டு உடனடியாக பணிகள் தொடங்கிவிடும்.
சென்னை-பெங்களூர் விரைவு சாலை
சென்னை-பெங்களூரு இடையேயான இன்டஸ்ட்ரியல் காரிடார் சாலையை 6 வழிச்சாலையாக அமைக்க ரூ.1,500 கோடி அனுமதிக்க முடிவு செய்துள்ளோம். நாடு முழுவதும் 12 விரைவுச் சாலைகளை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ரூ.20 ஆயிரம் கோடி செலவில் சென்னை-பெங்களூரு விரைவுச் சாலையும் ஒன்று.
80% நிலம் கிடைத்ததும் விரைவுச் சாலை அமைக்கும் பணியை தொடங்கிவிடுவோம். அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் இந்தப் பணிகள் தொடங்க வாய்ப்புள்ளது.
சென்னை-திருப்பதி சாலை
திருவள்ளூரில் பைபாஸ் சாலை அமைக்கப்படும். சென்னை-திருப்பதி இடையே சாலை அமைப்பது விரைவுபடுத்தப்படும். சென்னை-தடா இடையே ரூ.5 ஆயிரம் கோடியிலும், பூந்தமல்லி-வாலாஜாபாத் இடையே ரூ.1,500 கோடியிலும் சாலைகள் அமைக்கும் திட்டம் ரெடியாக உள்ளது. 3 அல்லது 4 மாதங்களில் இந்தத் திட்டங்கள் தொடங்கிவிடும்.
தமிழகத்தில் 1300 கி.மீ தேிய நெடுஞ்சாலை
மாநிலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிப்பதற்காக ரூ.2 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்குகிறது. தமிழகத்தில் புதிதாக 1,300 கி.மீ. நீள தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படும். மாநில சாலைகளுக்காக கூடுதல் நிதியாக ரூ.500 கோடி அளிக்க ஏற்கப்பட்டுள்ளது. தொழில்கள் வளர்ச்சிக்காக தமிழகத்தில் நெமிலி சரக்கு தளவாடங்கள் பூங்கா தொடங்குவதற்கான பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறோம்.
வேலைவாய்ப்புகள்
இலங்கைப் பகுதிக்கு செல்லாமல் வேறு பகுதிகளில் மீன்பிடிக்க 25 முதல் 30 டிராலர் படகுகளை தமிழகத்துக்கு வழங்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். எண்ணூர், தூத்துக்குடியில் கடற்கரை வேலைவாய்ப்பு மண்டலங்களை மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக எண்ணூரில் 315 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
சென்னையில் நெரிசல் குறையும்
சென்னையில் இருந்து கடல் வழியாக புதுச்சேரிக்கு கன்டெய்னர்களை கொண்டுசெல்லும் நடவடிக்கை விரைவில் தொடங்க உள்ளது. எனவே சென்னையில் கன்டெய்னர் போக்குவரத்தில் உள்ள நெரிசல் குறையும். மதுரவாயல்-சென்னை துறைமுகம் உயர்மட்ட சாலை தொடர்பான விரிவான திட்ட அறிக்கை இன்னும் 3 மாதங்களில் கிடைக்கும். பின்னர் அதற்கான பணிகள் தொடங்கும். அதேநேரம், சென்னையில் உள்ள காமராஜர் துறைமுகத்தை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.