குருவாயூர், தாதர், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் முன்பதிவு பெட்டிகள் இணைப்பு
மதுரை: பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க குருவாயூர் - சென்னை, ராமேஸ்வரம் - கன்னியாகுமரி, தாதர் - நெல்லை ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்களின் இரு மார்க்கங்களிலும் கூடுதல் பெட்டி இணைக்கப்பட உள்ளது.
குருவாயூரில் இருந்து மதுரை வழியாக சென்னைக்கு பகல் நேரத்தில் தினசரி ரயில் (வ.எண். 16128) இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் தூத்துக்குடியில் இருந்து வரும் இணைப்பு ரயிலும் (வ.எண். 16130) இணைக்கப்படுகிறது.
குருவாயூரில் இருந்து வரும் ரயிலில் 5 பொது பெட்டிகளும், 4 இரண்டாம் வகுப்பு உட்காரும் வசதி கொண்ட முன்பதிவு பெட்டிகளும், 4 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி முன்பதிவு பெட்டிகளும், 2 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகளும், ஒரு 2-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டியும் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க அந்த ரயிலில் இரு மார்க்கங்களிலும் கூடுதல் பெட்டி இணைக்கப்பட உள்ளது.
குருவாயூர் எக்ஸ்பிரஸ்
குருவாயூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் (வ.எண். 16127, 16128) இரு மார்க்கங்களிலும் கூடுதல் பெட்டி இணைக்கப்படுகிறது. அதன்படி வருகிற 2-ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 1-ந்தேதி வரை ஒரு 2-ம் வகுப்பு தூங்கும் வசதி முன்பதிவு பெட்டியும், ஒரு 2-ம் வகுப்பு உட்காரும் வசதி கொண்ட முன்பதிவு பெட்டியும் இணைக்கப்படும்.
ராமேஸ்வரம் - கன்னியாகுமரி
ரயில் எண் 22621.22688 ராமேஸ்வரம் - கன்னியாகுமரி - ராமேஸ்வரம் வாரம் மூன்றுநாள் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி கூடுதலாக இணைக்கப்பட உள்ளது. ஜனவரி 31ஆம் தேதி ராமேஸ்வரத்திலும், பிப்ரவரி 1ஆம் தேதி கன்னியாகுமரியிலும் கூடுதல் பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்பட உள்ளன.
தாதர் எக்ஸ்பிரஸ்
ரயில் எண் 22630/22629 திருநெல்வேலி - தாதர் - திருநெல்வேலி வாராந்திரி எக்ஸ்பிரஸ் ரயிலில் மூன்றடுக்கு ஏசி முன்பதிவு பெட்டி பிப்ரவரி 4ஆம் தேதி முதல் கூடுதலாக இணைக்கப்படுகிறது. தாதரில் இருந்து பிப்ரவரி 6ஆம் தேதி முதல் கூடுதல் பெட்டி இணைக்கப்பட உள்ளது.
பழனி - சென்ட்ரல்
பயணிகளின் கூட்டத்தை கருத்தில் கொண்டு, சென்னை சென்ட்ரல் - பழநி எக்ஸ்பிரஸ் ரயிலில், தற்காலிகமாக கூடுதல், 'ஏசி' பெட்டி இணைக்கப்படுகிறது. பிப்ரவரி, 1 முதல் மார்ச், 30ம் தேதி வரை, சென்னை சென்ட்ரல் - பழநி எக்ஸ்பிரஸ் ரயிலில், இரு மார்க்கங்களிலும், கூடுதலாக, முதல் வகுப்பு, 'ஏசி' வசதி பெட்டி ஒன்று கூடுதலாக இணைக்கப்படுவதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.