மழை எதிரொலி: 3 எக்ஸ்பிரஸ் ரயில்களை நாளை ரத்து செய்தது தெற்கு ரயில்வே
சென்னை: மழையின் காரணமாக சென்னைக்கு வரவேண்டிய இணை ரயில்கள் வராததால் மூன்று எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையை ரத்து செய்துள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழையின் தாக்கம் காரணமாக கடந்த சில வாரங்களாக ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சில தினங்களுக்கு முன்னர் தண்டவாளங்களை வெள்ளநீர் தேங்கியதால் முற்றிலும் ரயில்களை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. மேலும், தொடர்ந்து பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வந்தன.
இந்த நிலையில் தண்டவாளங்களை மூழ்கடித்த வெள்ளம் வடிந்ததையடுத்து தற்போது ரயில் போக்குவரத்து மீண்டும் சரிசெய்யப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. இருப்பினும், சென்னைக்கு வரவேண்டிய இணை ரயில்கள் வராததால், முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கட்ரா அந்தமான் எக்ஸ்பிரஸ் ரயில் நாளை ரத்து செய்யப்படுகிறது. சென்னை எழும்பூரில் இருந்து திப்ரூகர் செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் நாளை ரத்து செய்யப்படுகிறது. கன்னியாகுமரியில் இருந்து திப்ரூகர் செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் (வாராந்திர எக்ஸ்பிரஸ்) ரயிலும் நாளை ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.