நெல்லை: ரூ.2 கோடி கடன் கொடுத்த தொழிலதிபர் குடும்பத்துடன் காரில் தீ வைத்து தற்கொலை
நெல்லை: திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகே தொழில் ரீதியாக கொடுத்த கடன் ரூ. 1.75 கோடி திரும்ப வராத காரணத்தினால் மனமுடைந்த ரியல் எஸ்டேட் அதிபர் தனது, மனைவி, 12 வயது மகளுடன் காரில் பெட்ரோல் ஊற்றி சிலிண்டரை வெடிக்கச் செய்து தீவைத்து தற்கொலை செய்து கொண்டார்.
பாளையங்கோட்டையை அடுத்துள்ள வி.எம் சத்திரம் ஆச்சிமடம் அருகே சனிக்கிழமையன்று சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று தீ பற்றி எரிந்துள்ளது. இதனைக் கண்ட பொதுமக்கள் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அங்கு சென்ற பாளையங்கோட்டை தீயணைப்பு துறையினர் காரில் பற்றிய தீயை போராடி அணைத்தனர்.
அப்போது காருக்குள் 3 பேரின் உடல் கருகிய நிலையில் இருப்பது தெரியவந்தது. முதல் கட்ட விசாரணையில் உடல் கருகி இறந்தவர்கள் பிரபல கட்டட காண்ட்ராக்டர் பரிபூரணம், அவரது மனைவி மல்லிகா மற்றும் மகள் சுமதி என்பது தெரியவந்தது.
இது குறித்து போலீஸ் தரப்பில் தெரிவித்ததாவது:
பாளையங்கோட்டை கே.டி.சி நகரில் தனியார் பள்ளி எதிரில் உள்ள ரவிசங்கர் நகரில் வசித்து வருபவர் சுடலைமுத்து மகன் பரிபூரணம் என்ற கண்ணன் (39). இவரது தந்தை சுடலைமுத்து என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.
பாளையங்கோட்டை, சாந்திநகர், ரகுமத்நகர் பகுதியில் வீடுகள் சுடலைமுத்துதான் கட்டி கொடுத்துள்ளார். தந்தை சுடலைமுத்துக்கு பிறகு கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பரிபூரணம் என்ற கண்ணனும், இவரது சகோதரர்கள் நாகராஜன், செல்வம் ஆகியோரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தனராம்.
இந்த நிலையில் பரிபூரணம் என்ற கண்ணன் சனிக்கிழமை பிற்பகலில் மனைவி மல்லிகா (33) வுடன் ஆம்னி வேனில் பாளையங்கோட்டையில் 6 ஆம் வகுப்பு படித்து வரும் மகள் சுமதி (12) யை பள்ளியில் இருந்து அழைத்து கொண்டு வந்தாராம்.
காரை வெடிக்கச் செய்தனர்
பின்னர் திருநெல்வேலி தூத்துக்குடி பிரதான சாலையில் இருந்து வலது புறமாக சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள சாந்தினிநகருக்கு சென்றார். அங்கு கண்ணன், வீட்டில் இருந்து கொண்டு வந்த காஸ் சிலிண்டரை திறந்தும், காரில் இருந்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து மனைவி, மகளுடன் தற்கொலை செய்து கொண்டனராம்.
அருகில் அரை கி.மீ தொலைவில் குடியிருப்பில் வசித்தவர்கள் கார் வெடித்த சப்தம் கேட்டு வந்த பார்த்தனர். அப்போது கார் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. தகவலறிந்த தீயணைப்புத்துறை உதவிக் கோட்ட அலுவலர் ரா. குமரேசன், பாளையங்கோட்டை நிலைய அலுவலர் ச. வெட்டும்பெருமாள் மற்றும் தீயணைப்புபடையினர் சென்று தீயை அணைத்தனர்.
கருகிய உடல்கள்
இதில் கார் முற்றிலும் எரிந்து காணப்பட்டது. காரில் இருந்த பரிபூரணம் என்ற கண்ணன், மல்லிகா, சுமதி ஆகியோர் எலும்புக்கூடாக காரில் பின் இருக்கையில் இருந்தனர். மாநகர காவல் உதவி ஆணையர் க.ச. மாதவன், பெருமாள்புரம் காவல் ஆய்வாளர் பெ. கிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
சம்பவ இடத்திற்கு வந்த அவர்களது உறவினர்கள் காரில் எலும்பு கூடாக இருந்த அவர்களை பார்த்து கதறி அழுதனர். போலீஸார் மூவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
தற்கொலைக்கு காரணம்
தொழில் ரீதியாக பரிபூரணம் என்ற கண்ணன், ஏரல், மங்களாக்குறிச்சியை சேர்ந்த தனது நண்பர்களுக்கு ரூ. 1.75 கோடி பணம் கொடுத்திருந்தாராம். கொடுத்த பணத்தை இருவரும் திருப்பி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதில் மனமுடைந்து காணப்பட்ட கண்ணன் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
தற்கொலை கடிதம்
இதனிடையே பரிபூரணம் என்ற கண்ணன், தனது கைப்பட எழுதிய கடிதத்தில், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தேன். உடல்நலம் பாதிப்பு காரணமாக தொடர்ந்து தொழில் செய்ய முடியாததால், ஏரல் சிவகளை கிராமத்தை சேர்ந்த உறவினருடன் சேர்ந்து தொழில் செய்தேன். அவர் அறிமுகம் செய்த வைத்து இருவருக்கு சீட்டு எடுத்து ரூ. 1.70 கோடியும் ரொக்கப்பணம் ரூ. 5 லட்சமும் சேர்த்து ரூ. 1.75 கோடி கடன் கொடுத்தேன்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொடுத்த பணத்திற்கு வட்டியும் தரவில்லை. அசல் தொகையையும் திரும்பத் தரவில்லை. என்னை ஏமாற்றி விட்டார்கள். ஆகையால் அவமானம் தாங்காமல் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதாகவும், அவர்களை தண்டிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாராம். பெருமாள்புரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.