அடையாறு ஆற்றில் குளித்த 3 பேர் வெள்ளத்தில் சிக்கினர்... 2 பேர் மீட்பு, ஒருவரை தேடும் பணி தீவிரம்
சென்னை: அடையாறு ஆற்றில் குளித்த 3 பேரை வெள்ளம் அடித்துச் சென்றது. இதில் 2 பேர் மீட்கப்பட்டனர். ஒருவர் வெள்ளத்தில் சிக்கி பலியாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக கூவம் ஆறு, அடையாறு ஆறு மற்றும் பக்கிங்காம் கால்வாயில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. சென்னை நகரில் திரும்பிய திசை எல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
அடையாறு ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனைப் பார்த்து உற்சாகமடைந்த ஜாபர்கான்பேட்டை ராகவன் தெருவைச் சேர்ந்த வாலிபர்கள் விக்கி (வயது 20), சபரி (20) மற்றும் வெங்கடேசன் (19) ஆகிய மூன்று பேரும் ஆற்றில் குதித்து ஆட்டம் போட்டனர். அப்போது சீறிப் பாய்ந்த ஆற்று வெள்ளத்தில் அவர்கள் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதனைப் பார்த்த பொதுமக்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3 வாலிபர்களையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் விக்கியும், சபரியும் பத்திரமாக உயிரோடு மீட்கப்பட்டனர். வாலிபர் வெங்கடேசனை மீட்க முடியவில்லை அவர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, நிலைய அதிகாரி சக்திவேல் தீயணைப்புத்துறை வீரர்களோடு விரைந்து சென்றார்.
அடையாறு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட வாலிபர் வெங்கடேசனை உயிரோடு மீட்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் படகில் சென்று தேட முடியவில்லை. நேற்று மாலை வரை வெங்கடேசன் மீட்கபடவில்லை. இதனால் அவர் சேற்றில் சிக்கி பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
கோட்டூர்புரம் பகுதியிலும் அடையாறு ஆற்றில் அவரை தீயணைப்பு படைவீரர்கள் தேடினார்கள் அங்கும் அவர் மீட்கப்படவில்லை. வெங்கடேசன் கூலித்தொழிலாளி ஆவார். அவரது உறவினர்கள் அடையாறு ஆற்றங்கரையோரம் நின்று கதறி அழுத பரிதாபக்காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது.