எடப்பாடிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக கருணாஸ் உட்பட மேலும் 3 எம்.எல்.ஏக்கள் கடிதம்
கருணாஸ் உட்பட 3 எம்.எல்.ஏக்கள் முதல்வர் எடப்பாடிக்கான ஆதரவை திரும்பப் பெறுவதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.
Recommended Video
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக கருணாஸ் உட்பட மேலும் 3 எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் தனித்தனியே கடிதம் கொடுத்துள்ளனர்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக 19 எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் கடிதம் கொடுத்திருந்தனர். இந்த 19 பேரில் ஒருவரான கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்துவிட்டார். இதனால் தினகரன் அணி எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 18 ஆக குறைந்தது.
ஆளுநருடன் சந்திப்பு
இந்நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவை தினகரன் இன்று சந்தித்தார். அப்போது கருணாஸ், ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகிய எம்.எல்.ஏக்களும் உடன் சென்றனர்.
தனித்தனி கடிதம்
இந்த எம்.எல்.ஏக்களும் தாங்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவை திரும்பப் பெறுவதாக தனித் தனியே ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். இதையடுத்து தினகரன் அணியில் அதிகாரப்பூர்வமாக 21 எம்.எல்.ஏக்கள் இருப்பது உறுதியானது.
தினகரன் சந்திப்பு
முன்னதாக ஆளுநர் வித்யாசாகர் ராவை தினகரனும் சந்தித்து பேசினார். அப்போது மேலும் 3 எம்.எல்.ஏக்களும் எடப்பாடிக்கான ஆதரவை வாபஸ் பெற்றுவிட்டனர். இதனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுங்கள் என வலியுறுத்தினார் தினகரன்.
நல்ல முடிவு வரும்
பின்னர் இச்சந்திப்பு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், ஆளுநரிடம் எங்கள் கோரிக்கையை முன்வைத்திருக்கிறோம். அவரும் நல்ல முடிவை தெரிவிப்பதாக கூறியிருக்கிறார் என்றார்.