காசிமேட்டில் பயங்கரம்.. படகில் படுத்திருந்தவரை திருடன் என நினைத்து அடித்தே கொலை.. 3 மீனவர்கள் கைது
படகில் படுத்திருந்தவரை அடித்தே கொன்ற 3 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காசிமேடு: சென்னை காசிமேட்டில் விசைப்படகில் போதையில் படுத்திருந்தவரை திருடன் என நினைத்து அப்பகுதியை சேர்ந்த 3 மீனவர்கள் அடித்தே கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காசி மேடு இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார், ஐயப்பன், ராஜா. இவர்கள் மூவருமே விசைப்படகு மீனவர்கள். இந்நிலையில் 3 பேரும் நேற்றுமுன்தினம் நைட் ஷோ சினிமாவுக்கு சென்றுவிட்டு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, அற்புதம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ஒருவர் படுத்து தூங்கி கொண்டிருப்பதை கண்டனர். அந்த நபருக்கு 50 வயதிருக்கும் என கூறப்படுகிறது.
3 பேரும் அந்நபரை எழுப்பினர். படகை விட்டு வெளியே வருமாறு சொன்னார்கள். ஆனால் அவர் மறுத்து, படகிலேயே படுத்து கொண்டு இருந்திருக்கிறார். பின்னர் யார் என்ன என்ற விவரம் கேட்டனர். ஆனால் அந்த நபர் போதையில் இருந்ததால், சரிவர பதிலளிக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமுற்ற 3 பேரும் அந்நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அங்கிருந்த கட்டையை எடுத்து அந்நபரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் பலத்த காயமுற்ற அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து போலீசார் வழக்கு பதிவு செய்து, படுகொலை செய்த மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.