கடலூர் அருகே மாயமான 3 மாணவர்கள் ஆற்றில் சடலமாக மீட்பு
பண்ருட்டி அருகே மாயமான பள்ளி மணவர்கள் 3 பேர் திருவதிகை அணைக்கட்டில் சடலமாக மீட்கப்பட்டனர்.
கடலூர்: பண்ருட்டி அருகே மாயமான பள்ளி மணவர்கள் 3 பேர் திருவதிகை அணைக்கட்டில் சடலமாக மீட்கப்பட்டனர்.
பண்ருட்டி லிங்க் ரோட்டில் பிரகாஷ் என்பவர் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார். இவரது 15 வயது மகன் திவாகரனும் பண்ருட்டி பஸ் நிலையம் எதிரில் சலூன் கடை வைத்திருக்கும் வெங்கடேசன் என்பவரின் மகன் ஹரி ஆகிய இருவரும் பண்ருட்டி லிங்ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும் நேற்று மற்றொரு மாணவனுடன் குளிப்பதற்காக அருகில் உள்ள திருவதிகை அணைகட்டு பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அங்கு கரையில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தண்ணீரில் இறங்கி குளித்துள்ளனர்.
அப்போது அணையில் இருந்த புதைக்குழியில் சிக்கி மூன்று மாணவர்களும் மூழ்கினர். இரவு நீண்ட நேரமாகியும் பிள்ளைகள் திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அணைப்பகுதியில் சென்று பார்த்தனர்.
அப்போது மாணவர்களின் மோட்டார் சைக்கிளும் சட்டையும் இருப்பதைக்கண்ட பெற்றோர் போலீஸ் மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மூன்று மாணவர்களின் உடல்களையும் மீட்டனர்.
மூவரின் உடலும் பிரேத பரிசோதணைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாளில் குளிக்க சென்ற மாணவர்கள் அணையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.