ஹஜ் யாத்திரை நெரிசலில் சிக்கி 3 தமிழர்கள் பலி... ஜெயலலிதா இரங்கல்
சென்னை: சவுதி புனித மெக்கா அருகில் மினா நகரில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 தமிழர்கள் உட்பட 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த துயர சம்பவத்திற்கு முதல்வர் ஜெயலலிதா தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
சவுதி புனித மெக்கா அருகே மினா நகரில் நேற்று சாத்தான் மீது கல் எறியும் நிகழ்ச்சிக்காக லட்சக்கணக்கானோர் குவிந்திருந்தனர். அப்போது ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் சிக்கி 700க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 800க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இறந்தவர்களின் பெரும்பாலானோர் மலேசியா மற்றும் இந்தோனேஷிய நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர்.
உயிரிழந்தவர்களில் 3 தமிழர்கள் உட்பட 14 இந்தியர்களும் அடக்கம். அவர்களின் பெயர் பட்டியலை வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அவர்களில், நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையைச் சேர்ந்த சம்சுதின் முகமது இப்ராகிம், திருநெல்வேலி மாவட்டம், தென்காசியைச் சேர்ந்த முகைதீன் பிச்சை மற்றும் திருச்சியை சேர்ந்த ரெமிஜன் ஆகிய மூவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். 9 பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள். இதே போல், இந்த விபத்தில் 13 இந்தியர்களும் காயமடைந்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜெயலலிதா இரங்கல்
இந்த நிலையில் மினா நகர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "மெக்கா புனித ஹஜ் பயணத்தின் போது, 24.9.2015 அன்று சவூதி அரேபியாவின், மினா நகரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 700க்கும் மேற்பட்ட புனித ஹஜ் யாத்ரீகர்கள் உயிரிழந்தனர் என்பதையும், 800க்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என்பதையும் அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன்.
மேலும், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி வாயிலாக புனித யாத்திரை மேற்கொண்ட நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையைச் சேர்ந்த சம்சுதின் முகமது இப்ராகிம், திருநெல்வேலி மாவட்டம், தென்காசியைச் சேர்ந்த முகைதீன் பிச்சை மற்றும் திருச்சியை சேர்ந்த ரெமிஜன் ஆகியோர் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்.
இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.