லாரியில் லிப்டு கேட்டு ஏறி ரூ.35 ஆயிரம் பணம் கொள்ளை: திருநங்கைகள் 3 பேர் கைது
விழுப்புரம்: விழுப்புரம் அருகே லாரி டிரைவரிடம் ரூ.35 ஆயிரம் பணத்தை வழிப்பறி செய்ததாக திருநங்கைகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சென்ற லாரியை டிரைவர் துரை என்பவர் ஓட்டி வந்துள்ளார். லாரி விழுப்புரம் அருகே வந்தபோது துளசி (22), லத்திகா (23), சந்தியா (29) ஆகிய மூன்று திருநங்கைகள் லாரியை மறித்து லிப்டு கேட்டு ஏறியுள்ளனர்.
லாரியில் ஏறிய அவர்கள் லாரி டிரைவர் துரையை மிரட்டி ரூபாய் 35 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு தொழுதூர் அருகே ராமநத்தம் என்ற இடத்தில் நிறுத்தி இறங்கியுள்ளனர். இது குறித்து டிரைவர் துரை ராமநத்தம் போலீசில் புகார் அளித்தார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு 3 பேரை பிடித்து விசாரித்துள்ளனர். இந்த தகவல் கிடைத்ததும் ராமநத்தம் காவல்நிலையத்தில் திருநங்கைகள் குவிந்தனர். அவர்கள் 3 பேரை விடுவிக்க வேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விசாரணையில் 3 பேரும் பணத்தை திருடியது தெரிய வந்தது. இதில் 15,500 ரூபாய் மட்டும் திருப்பி கொடுத்தனர். போலீசார் 3 பேரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.