கரூர்: அணையில் குளித்த 3 வாலிபர்கள் நீரில் மூழ்கி பலி
கரூர்: மாவட்டம் சின்னதாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் குளித்த மூன்று இளைஞர்கள் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த பள்ளபட்டியை சேர்ந்தவர் ஷேக்பரித்(20). இவர் திருப்பூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
ஷேக்பரித் தன்னுடைய நண்பர்களான இதே பகுதியை சேர்ந்த அப்பாஸ் அலி(21), ஹர்ஷத் (20) ஆகியோருடன் கொத்தபாளையம் அமராவதி அணைக்கு நேற்று குளிக்க சென்றனர்.
அப்போது ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டனர். மூவருக்கும் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினர்.
குளிக்கச் சென்றவர்கள் நீண்ட நேரமாகியும் திரும்பாத காரணத்தால் சந்தேகமடைந்த உறவினர்கள் அணை பகுதிக்கு சென்று பார்த்தனர். அங்கே அவர்களின் உடைகள் மட்டுமே இருந்தது. இதனால் பதறிய உறவினர்கள் போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்து வந்த அரவக்குறிச்சி தீயணைப்பு துறையினர் மூவரின் சடலைத்தையும் மீட்டனர். அப்போது கூடியிருந்த உறவினர்கள் கதறி அழுத காட்சி சோகத்தை ஏற்படுத்தியது.
இளம் வயதில் ஆற்றில் மூழ்கி பலியாகிவிட்டார்களே என்று கூறி அழுதனர். அவர்களை தேற்றிய காவல்துறை அதிகாரிகள், மூவரின் சடலங்களையும் கரூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.