வெயில் சுட்டாலும் இடியோடு மழை பெய்யப்போகுதாம்...குடையோட வெளியே போங்க!
அக்னி நட்சத்திர வெயில் பட்டையை கிளப்புகிறது... தமிழகத்தில் இடியுடன் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை : அக்னி வெயில் அனலாக சுட்டாலும் தமிழகம், புதுவையின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகமெங்கும் வறட்சி தாண்டவமாடுகிறது. ஆறுகுளங்கள் வற்றிப்போய் தண்ணீர் பிரச்சினையும் தலைவிரித்தாடுகிறது. அக்னி நட்சத்திரம் வியாழக்கிழமை முதல் தொடங்கியுள்ளது, வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது.
கோவில்களில் உள்ள குளங்களும் வற்றிப்போய்விட்டன. மழை வேண்டி பல பகுதிகளில் வருண ஜெபம் செய்து வருகின்றனர். ஆனால் வருணபகவானின் கடைக்கண் பார்வைதான் பூமிக்கு கிடைத்தபாடில்லை.
கத்திரி வெயில்
தமிழகத்தில் கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்னரே 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவான நிலையில், தற்போது வெயிலின் கடுமை அதிகரித்து காணப்படுகிறது. அனல் காற்றை தாங்க முடியாமல் மக்கள் வெளியே வராமல் முடங்கியுள்ளனர்.
வெப்பநிலை
அதிகபட்சமாக, கரூரில் 107 டிகிரி வெயில் கொளுத்தியது. வேலூர், திருச்சி, திருவள்ளூர் 104 டிகிரி, திருப்பத்தூர், திருச்சி, பாளையங்கோட்டை, மதுரையில் 102 டிகிரி வெயில் கொளுத்தி வருகிறது.
வெயில் அதிகரிக்கும்
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிடுள்ள வானிலை முன்னறிவிப்பில், ‘தமிழகத்தில் சராசரியாக 102 முதல் 106 டிகிரி வெயில் இன்னும் 3 நாட்களுக்கு நீடிக்கும் கூறியுள்ளது.
இடியுடன் மழை
வெப்ப சலனம் காரணமாக உள் மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. அந்த பகுதிகளில் வெப்பநிலை சற்று குறைந்து காணப்படும். பிற பகுதிகளில் வெயில் வாட்டி வதைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
சென்னையில் மேக மூட்டம்
சென்னையில் கடல் காற்று சாதகமாக வீசுவதால் 99 டிகிரி வெப்பநிலை நீடிக்கிறது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.