ஆஹா... சந்தோஷமான செய்தி.. தமிழ்நாடு வெதர்மேன் என்ன சொல்றார் பாருங்க மக்களே!!
வட தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 15 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
சென்னை: வட தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 15 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக வெயில் வாட்டி வருகிறது. சென்னை உட்பட வட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்து வருகிறது.
அதே நேரத்தில் வெப்பசலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி போன்ற காரணங்களால் சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இருப்பினும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெயிலால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.
தமிழ்நாடு வெதர்மேன்
இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவல் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இன்று முதல் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்தின் வட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என அவர் தெரிவித்துள்ளார்.
இடியுடன் மழை
தமிழ்நாடு வெதர்மேன் என்ற பெயரில் பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் வானிலை மற்றும் மழை அறிவிப்பு குறித்து எழுதிவருகிறார். அவரது நேற்றைய பதில் கூறியிருப்பதாவது, தமிழகத்தின் உள் மற்றும் வட மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 15 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவித்துள்ளார்.
சென்னையில் மழை
காற்று வீசும் திசையில் இருந்து ஏற்படக்கூடிய மாற்றம், வெப்பம் ஆகியவற்றின் காரணமாக 9ஆம் தேதியான இன்று முதல் அடுத்த 15 நாட்களுக்குத் தமிழகத்தின் வட மற்றும் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னையிலும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
இப்போதுதான் வாய்ப்பு
செப்டம்பர் மாதத்தில் இப்போது வரை நமக்கு மழை கிடைக்கவில்லை. செப்டம்பர் மாதத்தில்தான் காற்று பின்னோக்கி வீசுக்கூடும் என்பதால், அந்தக் காலகட்டத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
செப்டம்பரில் வெளுத்துள்ளது
இதற்கு முன் 2013, செப்டம்பர் 12, 2011, செப்டம்பர் 6-ம் தேதி, 2007,செப் 27-ம் தேதி ஆகிய தேதிகளில் கனமழை பெய்திருக்கிறது.1996 செப்டம்பர் 11ஆம் தேதி சென்னையில் மிக கனமழை பெய்திருக்கிறது.
இப்போது பெய்யும்
அஸ்லாம், சிக்கிம், மேற்கு வங்கம், பீகார் மற்றும் சில வடகிழக்கு மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்களில் பருவமழை இன்னும் பெய்துவருகிறது. இந்த காலத்தில் தான் தமிழகத்தில் பருவமழை பெய்யாத பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.
இரவில் தீவிரமாகும்
அடுத்த 15 நாட்களுக்குத் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த மழை முதலில் உள்மாவட்டங்களில் நண்பகல் அல்லது மாலையில் தொடங்கி இரவில் தீவிரமாகும்.
சென்னையில் இடியுடன் மழை
கடற்பகுதியில் வீசும் காற்றுக்கு ஏற்ப மழை தீவிரமாகும். உள்மாவட்டங்களிலும் அதிகமான அளவில் மழை இருக்கும். தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் மழை இருக்கும். காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையில் எப்போது?
சென்னையைப் பொறுத்தவரை இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மழை தீவிரமாக இருக்கும். மழை பெய்யாத மாவட்டங்களில் இந்த மாத இறுதிக்குள் ஓரளவுக்கு மழையை எதிர்பார்க்கலாம் பெங்களூரிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
10,11, 12ஆம் தேதிகளில்
நீலகிரியில் குன்னூர், கொடைக்கானல், திண்டுக்கல் மாவட்ட பகுதிகள், மேட்டுப்பாளையும் பகுதிகள், கோவை போன்ற மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழையால் மழை இருக்கும். குறிப்பாக 10,11,12-ம்தேதிகளில் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வெள்ளம் வராது
வெள்ளம் வரும் அளவுக்கு மழை பெய்யாது. இந்த மழையால் வெள்ளம் வந்துவிடும் என்று அச்சப்படத் தேவையில்லை. அதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம். இவ்வாறு தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.