திபெத் எழுச்சி நாள்: சென்னை, டெல்லியில் திபெத்திய மாணவர்கள் போராட்டம் – கைது
சென்னை: திபெத் நாட்டின் விடுதலையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
திபெத் நாட்டை சீன ராணுவம் 1959ஆம் ஆண்டு மார்ச் 10ஆம்தேதி அத்துமீறி நுழைந்து ஆக்கிரமித்துக் கொண்டது. இதை கண்டித்து திபெத்தில் நடந்த விடுதலைப் போராட்டங்கள் தோல்வியில் முடிந்தன.
இந்த நிலையில் வெளி நாடுகளில் உள்ள திபெத் மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 10ஆம்தேதியை எழுச்சி நாளாக கடைபிடித்து வருகிறார்கள்.
சென்னையில் வசிக்கும் திபெத்திய மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களின் கோரிக்கையை வலியுறுத்திய அவர்கள், திபெத் பிரச்னையில் ஐ.நா. சபை தலையிட்டு தீர்வு காண வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள திபெத்திய அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் தலாய்லாமா நீண்டநாட்கள் வாழவேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.
போராட்டங்களின்போது காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும். திபெத்தியர்களைக் கொல்லக் காரணமாக இருந்த சீனத் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
1959ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி திபெத்தை சீனா ஆக்கிரமித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆண்டுதோறும் மார்ச் 10ஆம் தேதி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம்.
திபெத்தை விடுதலைப் போராட்டத்தில் இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இப்போராட்டம் காரணமாக பல ஆயிரம் குடும்பங்கள் தங்களது இருப்பிடத்தையும், உறவினர்களையும் விட்டு வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றன என்று தெரிவித்தனர்.
டெல்லியில் மாணவர்கள்
டெல்லியில் உள்ள சீன தூதரகம் முன்பு இன்று காலை திபெத் மாணவ-மாணவிகள் திரண்டு போராட்டம் நடத்தினார்கள். அப்போது டெல்லி போலீசாருக்கும், திபெத் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கைகலப்பில் ஈடுபட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.