சென்னை ரயிலில் பெண் சாப்ட்வேர் என்ஜினியரை பலாத்காரம் செய்ய முயன்ற டிடிஆர்
சென்னை: ஓடும் ரயிலில் பெண் சாப்ட்வேர் என்ஜினியரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற டிக்கெட் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த ராதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) சென்னையில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றுகிறார். 25 வயதான அவர் திருமணமானவர். இந்நிலையில் அவர் விடுமுறையை கழிக்க குண்டூருக்கு சென்றார். மீண்டும் சென்னைக்கு வர அவர் ஹைதராபாத்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். ஆனால் அவரது டிக்கெட் காத்திருப்போர் பட்டியலில் இருந்தது.
இந்நிலையில் ராதா ஹைதாராபாத்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறினார். அப்போது அவரின் உறவினர்கள் பி-1 பெட்டியில் டிக்கெட் பரிசோதகராக இருந்த ரங்கையாவை(45) அணுகி ராதாவுக்கு பெர்த் ஒதுக்குமாறு கேட்க அவரும் ஒதுக்கி கொடுத்தார். ராதா தனக்கு ஒதுக்கப்பட்ட பெர்த்தில் படுத்து தூங்கிவிட்டார். தன்னை யாரோ தீண்டுவது போல தோன்றி ராதா திடுக்கிட்டு விழித்தால் ரங்கையா அங்கு நின்று தன்னிடம் சில்மிஷம் செய்ததை பார்த்து அதிர்ந்தார்.
இதையடுத்து ராதா ரங்கையாவை திட்டி அனுப்பி வைத்துவிட்டு மீண்டும் தூங்கிவிட்டார். ரங்கையா அங்கு மீண்டும் வந்து ராதாவின் அருகில் படுத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால் அதிர்ந்த ராதா ரங்கையாவிடம் இருந்து தப்பியோடி கழிவறைக்கு சென்றார். அங்கிருந்து தனது கணவருக்கு போன் செய்து நடந்ததை தெரிவித்தார். உடனே ராதாவின் கணவர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
ரயில் ஓங்கோல் வந்தது. ஓங்கோலில் கீழே இறங்கிய ராதா நடந்தது பற்றி ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்துவிட்டு மீண்டும் குண்டூருக்கே சென்றுவிட்டார். ஓங்கோல் போலீசார் சென்னை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ரயில் சென்னை சென்ட்ரலை வந்தடைந்ததும் அங்கு காத்திருந்த ரயில்வே போலீசார் ரங்கையாவை கைது செய்து ஓங்கோல் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.