சென்னை- நெல்லை பிரீமியம் ரயிலில் கட்டணம் ரூ.5,600! பயணிகள் அதிருப்தி...
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை எழும்பூர்- நெல்லை ‘பிரீமியம்' சிறப்பு ரயிலில் படுக்கை வசதிக்கொண்ட பெட்டிகளில் டிக்கெட் ரூ.2 ஆயிரம் வரையும், மூன்றடுக்கு ஏ.சி. டிக்கெட் ரூ.4 ஆயிரம் வரையும், இரண்டடுக்கு ஏ.சி. டிக்கெட் ரூ.5,600 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் பண்டிகை கொண்டாட சொந்த ஊர் செல்ல உள்ள பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னை எழும்பூர்-நெல்லை, சென்னை எழும்பூர்-நாகர்கோவில், ஈரோடு-சென்னை சென்ட்ரல், கோவை- சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்கள் இடையே சிறப்பு சாதாரண மற்றும் ‘பிரீமியம்' ரயில்களை இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது.
அதில் ஒருசில ரயில்களுக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. முன்பதிவு தொடங்கியும் சிறப்பு ரயில்களில் அதிக டிக்கெட்டுகள் விற்பனையாகாமல் மந்தமாகவே இருந்தது.
எந்த ரயில்களிலும் டிக்கெட்டுகள் விற்று தீரவில்லை. நேற்று மாலை 5 மணி வரையிலான நிலவரப்படி அனைத்து ரயில்களிலும் பெரும்பான்மையான டிக்கெட்டுகள் விற்பனையாகாமல் இருந்தது.காரணம் டிக்கெட்டுகளின் விலைதான்.
சாதாரணக் கட்டணம்
சென்னையிலிருந்து சாதாரண ரயில்களில் நெல்லை செல்வதற்கு படுக்கை வசதிக்கொண்ட பெட்டிகளில் ரூ.385ம், மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகளில் ரூ.ஆயிரம் மற்றும் இரண்டடுக்கு குளிர்சாதன பெட்டியில் ரூ.1,410ம் வசூலிக்கப்படுகிறது.
பிரீமியம் ரயில் கட்டணம்
ஆனால் சென்னை எழும்பூர்- நெல்லை ‘பிரீமியம்' சிறப்பு ரயிலில் ஐந்து மடங்கு கட்டணம் அதிகமாக வசூலிக்கப்பட்டது.படுக்கை வசதிக்கொண்ட பெட்டிகளில் டிக்கெட் ரூ.2 ஆயிரம் வரையும், மூன்றடுக்கு ஏ.சி. டிக்கெட் ரூ.4 ஆயிரம் வரையும், இரண்டடுக்கு ஏ.சி. டிக்கெட் ரூ.5,600 வரையிலும் விற்பனை செய்யப்பட்டதாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.
இணையதளம் மூலம்
‘பிரீமியம்' சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கழக இணையதளத்தின் மூலம் மட்டுமே மேற்கொள்ளமுடியும்.இது தெரியாமல் பயணிகள் சிலர் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களில் வரிசைகளில் காத்து நின்றனர்.
பயணிகள் வாக்குவாதம்
ரயில்வே ஊழியர்கள் தெரிவித்த உடன் டிக்கெட் எடுப்பதற்காக காத்து நின்ற பயணிகள் புலம்பியவாறு சென்றனர். ஆத்திரமடைந்த பயணிகள் சிலர் ரயில்வே ஊழியர்களோடு வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
விமானக்கட்டணத்தை விட அதிகம்
இதேபோன்று ‘பிரீமியம்' ரயிலுக்கான டிக்கெட் எடுப்பதற்காக இணையதள சேவை மையங்களிலும் டிக்கெட் கட்டணத்தை விடவும் கூடுதலாக ரூ.50 வசூலிக்கப்பட்டதாகவும், ‘பிரீமியம்' ரயில்களில் செல்வதை விடவும் விமானத்தில் டிக்கெட் எடுத்து பயணம் செய்துவிடலாம் என்றும் ‘பிரீமியம்' ரயிலில் டிக்கெட் எடுத்த பயணிகள் சிலர் அதிருப்தியில் தெரிவித்தனர்.
நெல்லை – எழும்பூர் ரயில்
இதனிடையே அக்டோபர் 20ஆம் தேதி எழும்பூர்-நெல்லை இடையே அறிவிக்கப்பட்ட ‘பிரீமியம்' சிறப்பு ரயிலில் (வ.எண். 00609) படுக்கை வசதிக்கொண்ட பெட்டிகளுக்கான டிக்கெட்டுகள் மட்டும் விற்று தீர்ந்தது. மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டியில் 114 இருக்கைகளும், இரண்டடுக்கு குளிர்சாதன பெட்டியில் 31 இருக்கைகளும் விற்பனையாகாமல் இருந்தது.
கோவைக்கு வரவேற்பு இல்லை
20ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை செல்லும் ‘பிரீமியம்' சிறப்பு ரயிலில் (வ.எண். 00605) படுக்கை வசதிக்கொண்ட பெட்டிகளில் 421, மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டியில் 146 மற்றும் இரண்டடுக்கு குளிர்சாதன பெட்டியில் 29 இருக்கைகளும் விற்பனையாகாமல் காலியாக இருந்தது.
ஆர்வமில்லாத பயணிகள்
கோவையிலிருந்து வரும் 21ஆம் தேதி சென்னை சென்ட்ரல் புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில், நாகர்கோவிலில் இருந்து 20ஆம் தேதி சென்னை எழும்பூர் புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில், ஈரோடில் இருந்து 20ஆம் தேதி சென்னை எழும்பூர் புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில், எழும்பூரில் இருந்து 24ஆம் தேதி நாகர்கோவில் புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் போன்றவற்றிலும் பெரும்பாலான இடங்கள் காலியாக இருந்தது.
காலி இடங்கள் அதிகம்
நெல்லையில் இருந்து 21ஆம் தேதி சென்னை எழும்பூர் புறப்படும் சிறப்பு ரயில், எழும்பூரில் இருந்து 27ஆம் தேதி நெல்லை புறப்படும் சிறப்பு ரயில் போன்றவற்றிலும் காலி இடங்கள் அதிகமாக இருந்தது.
அதிகாரிகள் சமாளிப்பு
இது குறித்து ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்ட தேதிகள் முரண்பாடாக உள்ளது. சென்னை நகரில் இருந்துதான் பெரும்பாலானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு பண்டிகையை கொண்டாடுவதற்கு செல்வார்கள். ஆனால் சில சிறப்பு ரயில்கள் 20ஆம் தேதியும் நெல்லை, கோவை உள்ளிட்ட சில இடங்களில் இருந்து சென்னைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவே முதன்மையான காரணமாகும்" என்று கூறி சமாளித்தார்.
ஏழைகளுக்கு எட்டாக்கனியா
ஆம்னி பஸ்களில்தான் தீபாவளிப் பண்டிகை காலங்களில் கட்டணக்கொள்ளை நடைபெறும். இன்றோ ரயில்களிலேயே ஏழைகளால் எட்டிக்கூட பார்க்க முடியாத அளவிற்கு கட்டணக்கொள்ளைகள் நடைபெறுகின்றன. இதே நிலை நீடித்தால் வரும் காலங்களில் பண்டிகையை கொண்டாட யாரும் சொந்த ஊருக்கு போக விரும்ப மாட்டார்கள் என்றே கூறப்படுகிறது.