புதிய தலைமுறை டிவி அலுவலகம் மீது 'டிபன் பாக்ஸ்' குண்டுகள் வீச்சு!!
சென்னை: சென்னையில் உள்ள புதிய தலைமுறை டிவி அலுவலகம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் இன்று அதிகாலை 2 டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தாலி பெண்களுக்கு அவசியமா? என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதை ஏற்றுக் கொள்ள முடியாத மத அமைப்பினர் சிலர் அந்த தொலைக்காட்சியின் ஒளிப்பாதிவாளர் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலையில் தொலைக்காட்சி அலுவலகத்தின் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் 2 டிபன் பாக்ஸ் குண்டுகளை வீசி தாக்கியுள்ளனர்.
அதிகாலை மூன்றேகால் மணியளவில் இந்த தாக்குதல் நடந்தது. அலுவலகத்தினை நோட்டமிட்டபடி, இரு சக்கர வாகனங்களில் சென்ற சிலர், சில நிமிடங்களில் திரும்பி வந்து, நுழைவுவாயிலின் அருகே நின்றனர். பின்னர் அடுத்தடுத்து இரண்டு டிபன்பாக்ஸ் குண்டுகளை வீசினர்.
இந்த குண்டுகள் அலுவலக நுழைவுவாயில் பகுதியில் வெடித்தன. இதுகுறித்து உடனடியாக கிண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தடயங்களை சேகரித்தனர். 2 டிபன் பாக்ஸ் குண்டுகளின் பாகங்களைக் கொண்டு வெடிகுண்டு நிபுணர்களும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தாக்குதலில் பெரிய அளவில் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
சிசிடிவி காட்சி வெளியீடு
இதனிடையே, புதிய தலைமுறை சென்னை அலுவலகம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் இன்று அதிகாலை வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தி காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ள காட்சியின்படி, அலுவலகத்தினை நோட்டமிட்டபடி, இரு சக்கர வாகனங்களில் சென்ற சிலர், சில நிமிடங்களில் திரும்பி வந்து, நுழைவுவாயிலின் அருகே நின்றனர்.
பின்னர் அடுத்தடுத்து இரண்டு டிபன்பாக்ஸ் குண்டுகளை வீசிவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர். அடையாளம் தெரியாத இந்த நபர்கள் வீசிய குண்டுகள் அலுவலக நுழைவுவாயில் பகுதியில் வெடித்தன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தடயங்களை சேகரித்தனர். கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
செய்தியாளர்கள் போராட்டம்
இதனிடையே குண்டு வீச்சு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் குண்டு வீசியவர்களை கைது செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் புதிய தலைமுறை அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த குண்டு வீச்சு சம்பவத்திற்கு பத்திரிகையாளர்கள் சங்கங்களும் கண்டனம் தெரிவித்துள்ளன.