வண்டலூரில் மீண்டும் பழைய இடத்தில் புலிகள்... பார்வையாளர்கள் வழக்கம் போல பார்க்கலாம்!
சென்னை: சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில், தொடர் மழையால் புலிகள் இருந்த பகுதியில் இருந்த அகழிச் சுவர் இடிந்ததால் வேறு இடத்திற்கு மாற்றப்பட்ட புலிகள் தற்போது மீண்டும் பழைய இடத்திற்கே மாற்றப்பட்டுள்ளது என்று உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வண்டலூர் உயிரியல் பூங்காவின் கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிலுள்ள புலிகள் இருப்பிடத்தில் தொடர் மழை காரணமாக அகழியின் வெளிப்புற சுற்றுச்சுவர் 14.11.2014 அன்று இடிந்து விழுந்துவிட்டது. இதன் காரணமாக அவ்விருப்பிடத்தில் இருந்த புலிகள், பாதுகாப்பு கருதி பகல் நேர திறந்தவெளி இருப்பிடத்திற்குள் விடப்படவில்லை.
இதனால் புலிகளை பார்வையாளர்கள் நேரடியாக காண முடியாத சூழல் இருந்ததால், ஏமாற்றத்தை தவிர்க்கும் பொருட்டு சிசிடிவி கேமரா உடன் இணைக்கப்பட்ட திரையில் காண்பதற்கு தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தற்பொழுது மேற்படி புலிகள் இருப்பிடத்தில் உரிய பாதுகாப்பு வசதியுடன் புதிய இருப்பிடம் ஒன்று அமைக்கும் பணி முடிவுப்பெற்றுள்ளது. எனவே புலிகளை பார்வையாளர்கள் நேரடியாக கண்டு களிக்கும் பொருட்டு 13.12.2014 அன்று காலை 11.00 மணியளவில் பகல் நேர திறந்தவெளி இருப்பிடத்திற்குள் திறந்து விடப்பட்டது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பெயர் சூட்டப்பட்ட வித்யா, ஆர்த்தி, நேத்ரா, உத்ரா மற்றும் பத்மா ஆகிய ஐந்து ஆரஞ்சு நிறப் புலிகளை
பார்வையாளர்கள் இன்று முதல் கண்டுகளிக்கலாம் என்பதை பூங்கா நிர்வாகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவர் இடிந்து விழுந்ததில் நேத்ரா என்ற புலிக் குட்டி தப்பி ஓடி விட்டதாக பெரும் பரபரப்பு எழுந்தது. இருப்பினும் அந்தப் புலியைப் பிடித்து விட்டதாக பின்னர் தகவல்கள் வெளியாகின என்பது நினைவிருக்கலாம்.