நெல்லையில் சிறுத்தை, புலி நடமாட்டம்.. பொதுமக்கள் பீதி
நெல்லை அருகே உள்ள கிராமங்களில் சிறுத்தை புலி நடமாட்டம் அதிகாரித்துள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
திருநெல்வேலி: நெல்லை அருகே கிராமப்புறத்தில் சிறுத்தை புலி நடமாட்டம் அதிகரித்துள்ளதாகல் பொதுமக்கள் பயத்தில் உள்ளனர்.
நெல்லை மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் கோவிந்தபேரி, அழக்கப்புரம், சிவசைலம் உள்ளிட்ட பல்வேறு கிராமப்பகுதிகள் உள்ளன. இங்குள்ள பிரதான தொழிலாக விவசாயம் செய்து வருகின்றனர். வீடுகளில் கால்நடைகளையும் இவர்கள் வளர்த்து வருகின்றனர். மலையடிவார தோட்டங்களில் காட்டு பன்றி, மிளா உள்ளிட்டவை புகுந்து நெல், நிலக்கடலை, சிறு கிழங்கு பயிர்களை நாசம் செய்து வருகிறது.
வேலம்மாள் என்பவர் மருமகள் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் இந்தப் பகுதியல் வசித்து வருகிறார். இவரது மகன்கள் வெளியூரில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் அதிகாலை அவரது வீட்டில் காவலுக்கு போட்டிருரந்த நாய் பயங்கரமாக குறைத்தது. இந்த சத்தம் கேட்டு வேலம்மாள் மருமகள் சக்தி எட்டி பார்த்தார். அப்போது நாய் ஒன்றை சிறுத்தை கடித்து குதறி கொண்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த சக்தி அலறினார். இதனைத் தொடர்ந்து, சிறுத்தை நாயை கவ்வி கொண்டு ஓடிவிட்டது. இரவு முழுவதும் குழந்தைகளுடன் சக்தி பயத்தில் இருந்தார். இன்று காலை எழுந்து பார்த்தபோது நாயை கடித்த இடத்தில் ரத்தம் உறைந்து கிடந்தது. இரண்டு தினங்களுக்கு முன்பும் இது போன்றே அவர்கள் வளர்த்து வந்த இன்னொரு நாயை சிறுத்தை தூக்கிச் சென்றுள்ளது.இந்த சம்பவம் குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து வேலம்மாள் கூறும்போது எங்கள் வீட்டில் பெண்கள் மட்டுமே வசித்து வருகிறோம். இந்த பகுதியில் மின் விளக்குகள் இருந்தும் மின் கம்பங்கள் இருளில் மூழ்கி கிடக்கின்றன. இதனால் இங்கு சிறுத்தை அடிக்கடி புகுந்து ஆடு, மாடுகளை கடித்து கொல்கிறது. தெரு விளக்குகளை அன்றாடம் எரிய வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுத்தையை பிடிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.