ஊட்டி: பொங்கலை பீதியோடு கொண்டாடிய கிராம மக்கள்.. போக்கு காட்டும் புலி
ஊட்டி: உதகமண்டலத்தில் மலைக்கிராம பகுதியில் ஊருக்குள் புகுந்து 3 பேரை கொன்ற புலி, கையில் சிக்கியும், போக்கு காட்டிவிட்டு தப்பி ஓடியது.
புலி எப்போது தாக்குமோ என்ற பயத்தினாலேயே மலை கிராம மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடாமல் வீட்டுக்குள் முடங்கி கிடந்தனர்.
நேற்று மாலை பசியோடு இருந்த புலி கடமானை விரட்டி வந்த போது அதிரடிப்படையினர் மற்றும் வனத்துறையினர் சுற்றி வளைத்தனர். ஆனால் அது தப்பி ஓடிவிட்டது. இதனால் வனத்துறையினர் தேடுதல் வேட்டையை மீண்டும் தொடங்கியுள்ளனர்.
மனித வேட்டை
கடந்த சில வாரங்களுக்கு முன்பு முதுமலை வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்த புலி உதகமண்டலம் அருகே 2 பெண்கள் உள்பட 3 பேரை அடுத்தடுத்த தினங்களில் தாக்கி கொன்றது.
10 நாட்களாக தேடுதல் வேட்டை
புலியை வனத்துறையினர் மற்றும் அதிரடிப்படையினர் இணைந்த கூட்டுப்படையினர் கடந்த 10 நாட்களாக தேடி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 10 மற்றும் 11ம் தேதிகளில் குந்தசப்பை பகுதியில் பொருத்தப்பட்டிருந்த தானியங்கி கேமராவில் புலியின் உருவம் பதிவானது.
மாயமான புலி
அதைத்தொடர்ந்து அந்த பகுதியை சுற்றி வளைத்த கூட்டுப்படையினர் புலியை வெளியே கொண்டு வர பட்டாசுகளை வெடித்தனர். ஆனால் புலி யார் கண்ணிலும் சிக்கவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த 48 தானியங்கி கேமராக்களிலும் தென்படவில்லை.
புலி நடமாட்டம்
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குந்தசப்பை பகுதியில் வைக்கப்பட்டு இருந்த 48 கேமராக்களில் 4 கேமராக்களில் புலியின் உருவம் பதிவாகி இருந்தது. சுமார் 1 மணி நேரம் அந்த பகுதியில் புலி நடமாடியது கேமராவில் பதிவான படங்கள் மூலம் தெரியவந்தது.
பீதியடைந்த பொதுமக்கள்
குந்தசப்பை பகுதியில், கடந்த 6-ந் தேதி முத்துலட்சுமி என்கிற பெண்ணை கொன்ற இடத்தில் நேற்று மாலை சுமார் 4.35 மணி அளவில் திடீரென்று புலி உலா வந்தது. இதைப்பார்த்த பொதுமக்கள் கூச்சல் போட்டனர். தேயிலை தோட்டத்தில் சில நிமிடங்கள் உலா வந்த புலி பின்னர் ஒரு பாறையின் மீது தாவி ஏறி அருகில் இருந்து புதர் செடிக்குள் ஓடிச்சென்று மறைந்தது. ஏராளமான பொது மக்கள் தங்களது வீடுகளின் மீது ஏறி நின்று புலியை பீதியுடன் பார்த்தனர்.
ஓடி மறைந்த புலி
இந்த நேரத்தில் புலியை கண்டதும் கூட்டுப்படையினர் 4 குழுக்களாக பிரிந்து 4 திசைகளில் இருந்து புலி இருந்த இடத்தை சுற்றி வளைத்தனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக கடமான் ஒன்றை புலி விரட்டி வந்தது. புலியை கண்ட கடமான் அங்கிருந்து தப்பி ஓடியது.
மீண்டும் சில நிமிடங்கள் பொதுமக்கள் பார்வையில் பட்ட புலி அங்கிருந்து மின்னல் வேகத்தில் ஓடி மறைந்தது. அதற்குள் இருட்ட ஆரம்பித்து விட்டதால் புலி நடமாட்டம் யாருக்கும் தெரியவில்லை.
இரவிலும் வேட்டை
பின்னர் இரவில் தெரியும் அதிநவீன கேமரா உதவியுடன் புலி நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது.
கூட்டுப்படையினர் 4 திசைகளில் இருந்தும் புலி இருந்த பகுதியை சுற்றி வளைத்து நெருங்கினர். ஆனால் அந்த பகுதி அடர்ந்த புதர்செடிகளை கொண்டு இருந்ததாலும், இருட்ட ஆரம்பித்து விட்டதாலும் புலி அங்கிருந்து மின்னல் வேகத்தில் பாய்ந்து தப்பி புதரில் மறைந்தது.
பிடிக்க முடியாத வனத்துறை
கடந்த 4-ந் தேதி முதல் மனிதர்களை தாக்கி வரும் புலி நேற்று பொதுமக்கள் அனைவரின் கண்ணில் பட்டபோதும் வனத்துறையினர் மற்றும் அதிரடிப்படையினர் இணைந்த கூட்டுப்படையால் பிடிக்க முடியாமல் போனது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
எப்படியும் பிடிச்சிருவோம்
புலி இருக்கும் இடம் தெரிந்து விட்டதால் இன்று (வெள்ளிக்கிழமை) புலி பிடிபட்டு விடும் என்று வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர். கடந்த 2 வாரமாக பொது மக்களை அச்சுறுத்தி வரும் புலியை வனத்துறையினர் மற்றும் அதிரடிப்படையினர் விரைந்து சென்று பிடிக்க வேண்டும் என்று பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
தொழிலாளர்கள் பீதி
ஊட்டி தொட்டபெட்டாவில், தோட்டக்கலைத் துறை சார்பில் "தேயிலை பூங்கா' அமைக்க, கடந்த 4ம் தேதி, முதல்வர் அடிக்கல் நாட்டினார். இந்த இடத்தில், தேயிலைச் செடிகள் மற்றும் பூங்கா அமைத்து, பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு நீலகிரி தேயிலையின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையிலான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பணியை வரும் கோடை சீசனுக்குள் முடிக்க தோட்டக்கலை துறையினர் திட்டமிட்டிருந்தனர். புலி பீதியால் தொழிலாளர்கள் வராததால், பணிகள் முடங்கியுள்ளன.
பீதியுடன் கொண்டாட்டம்
புலி நடமாட்டம் காரணமாக கடந்த 6-ந் தேதி பாதுகாப்பு காரணங்களுக்காக தொட்டபெட்டா காட்சிமுனை மூடப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர். பொங்கல் விடுமுறைக்கு வந்த சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டாவை காண முடியாமல் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இந்த நிலையில் தொட்டபெட்டா காட்சி முனைப்பகுதி கடந்த 10 நாட்களுக்கு பின் நேற்று திறக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் வாகனத்தில் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.