நேதாஜி பற்றிய மர்மங்களை முழுமையாக அவிழ்க்க ரஷ்யாவால் மட்டுமே முடியும்
சென்னை: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றிய ரகசிய தகவல்கள் வெளியேவர ரஷ்யாவின் உதவி தேவை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
விடுதலை போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸ் கடைசி காலம் குறித்து, மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. விமான விபத்தில் உயிரிழந்ததாகவும், ரஷ்யா சென்ற சுபாஷ் சந்திர போஸ் திடீரென மாயமாகிவிட்டதாகவும் கருத்துக்கள் உலவுகின்றன.
மேற்கு வங்கம் மற்றும் மத்திய அரசுகள் போஸ் குறித்து வெளியிட்ட ஆவணங்கள் அடிப்படையில், அவர் விமான விபத்தில் உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகமே உறுதிப்படுத்தப்படுகிறது.
அதேநேரம், அவரை போர்க்குற்றவாளி என்று அப்போதைய அரசு அறிவிக்கவில்லை என்று ஜப்பானுக்கான இந்திய தூதரக செயலாளர் ஜே.என்.தீக்ஷித் எழுதிய கடிதம் ஒன்றில் இருந்து ஆதாரம் கிடைத்துள்ளது.
நேதாஜி விவகாரத்தில், உலகின் பல நாடுகளின் உதவிகளும் தேவைப்படுவதாக கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். ஆய்வாளர் அனுஜ் தார் கூறுகையில், ரஷ்யாவுக்கும், நேதாஜியின் கடைசி கால வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பிருந்துள்ளது. எனவே ரஷ்யா தன்னிடமுள்ள தகவல்களை வெளியிட்டால் இந்த விவகாரத்தில் கூடுதல் தகவல் கிடைக்கலாம் என்கிறார்.