நாகர்கோவில் வழித்தட ரயில்கள் மாற்று பாதையில் இயக்கம் - பயணிகள் கவலை
சென்னைக்கு செல்லும் நாகர்கோவில் ரயில் வழித்தடம் வரும் 9ம் தேதி முதல் மாற்றியமைக்கப்பட இருப்பதால் தென் மாவட்ட மக்கள் திகைப்பில் உள்ளனர்.
நெல்லை: சென்னைக்கு செல்லும் நாகர்கோவில் ரயில் வழித்தடம் வரும் 9ம் தேதி முதல் மாற்றியமைக்கப்பட இருப்பதால் தென் மாவட்ட மக்கள் திகைப்பில் உள்ளனர்.
சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் இதுவரை சேலம், ஈரோடு, கரூர் மார்க்கத்தில் இயக்கப்பட்டு வந்தது. வரும் 9ம் தேதி முதல் இந்த ரயில் சேலம், நாமக்கல், கரூர் மார்க்கத்தில் இயக்கப்பட உள்ளது.
9ம் தேதி முதல் இந்த ரயில் சென்னை சென்டரில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.05 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும். இதற்கு முன்பு மாலை 6 மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதிய வழித்தட அட்டவணைப்படி சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி, நெல்லை வழியாக நாகர்கோவிலுக்கு செல்லும்.
மறுமார்க்கமாக இந்த ரயில் வரும் 11ம் தேதி முதல் நாகர்கோவிலில் இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டரலுக்கு மறுநாள் காலை 11.40 மணிக்கு வந்து சேரும்.
இந்த ரயிலும் நாமக்கல் வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரயில் பெரும்பூரில் நின்று செல்லும் என்று கூறப்படுகிறது. பயண நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.