சட்டசபையில் எதிரொலித்த 'சிட்டுக்குருவி' பிரச்சினை
சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு அவற்றை பாதுகாக்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்ற கேள்விக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
சென்னை: அழிவின் விளிம்பில் உள்ள சிட்டுக்குருவிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
தமிழக சட்டசபை 3 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று கூடியது. அப்போது மறைந்த உறுப்பின்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கேள்வி நேரம் தொடங்கியது.
அப்போது விழுப்புரம் மாவட்டம், வானூர் கழுவெளியில் பறவைகள் சரணாலயம் அமைக்கப்படுமா என்று எம்எல்ஏ சக்கரபாணி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அப்பகுதியில் பறவைகள் சரணாயலம் அமைக்கப்படும் என்றார்.
சிட்டுக்குருவிகள் தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் அவற்றை பாதுகாக்க தமிழக அரசு நடவடிவக்கை எடுக்குமா என்று திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு எழுப்பிய கேள்விக்கும் நிச்சயம் அந்த இனங்கள் பாதுகாக்கப்படும் என்று அமைச்சர் பதிலளித்தார்.
கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் அடிப்படை வசதிகள் அமைக்கப்படுமா என்று நாங்குநேரி எம்எல்ஏ ஹெச். வசந்தகுமார் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், உறுப்பினரின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றும் என்றார்.
பள்ளிக்கரணையில் சதுப்புநில பகுதிகளில் பறவைகள் சரணாலயம் அமைக்க வேண்டும் என்று எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் கேட்டுக் கொண்டதற்கு, அதுகுறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.