விருகம்பாக்கம் தொகுதியில் திப்பு சுல்தான் வாரிசு போட்டி: சாரட் வண்டியில் வந்து வேட்பு மனு தாக்கல்
சென்னை: சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் நசீர் அகமது சுல்தான், சாரட் வண்டியில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். இவர் திப்பு சுல்தானின் வாரிசு என்று கூறியதுதான் கூடுதல் சுவாரஸ்யம்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்து விட்டது. தமிழகம் முழுவதும் 6700 பேர் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் துறையின் இணையதளத்தில் இரவு 9 மணி நிலவரப்படி, பதிவேற்றம் செய்யப்பட்ட வேட்புமனுக்களின் எண்ணிக்கை 6,700ஐத் தாண்டியுள்ளது. இதில், ஆண்கள் 5,950 பேரும், பெண்கள் 748 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 2 பேரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட வெளிமாநிலங்களைச் சேர்ந்த பொதுப் பார்வையாளர்கள் முன்னிலையில், வேட்புமனுக்கள் அனைத்தும் சனிக்கிழமை காலை 11 மணிக்கு பரிசீலனை செய்யப்படுகின்றன. இதற்கென இரண்டு தொகுதிகளுக்கு ஒரு வெளி மாநிலப் பார்வையாளர் வீதம் 122 பேர் தமிழகம் வந்துள்ளனர்.
பரிசீனைக்கு பின்னர் மனுக்களைத் திரும்பப் பெற திங்கள்கிழமை கடைசி நாளாகும். அன்றைய தினம் மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் திங்கள்கிழமை மாலையே வெளியிடப்படும்.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான நேற்று சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் ஒரு சுயேட்சை வேட்பாளர் சாரட் வண்டியில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். தன்னை திப்புசுல்தானின் வாரிசு என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், தன்னுடைய பெயர் நசீர் அகமது சுல்தான் என்று கூறினார்.
டிப்ளமோ படித்து விட்டு அட்வர்ட்டைசிங் பிசினஸ் செய்வதாகவும். என்னுடைய தந்தை சையத் ஜமாலுதீன் சுல்தான். அவர் டெய்லர் தொழில் செய்தார் என்றும் கூறினார்.
தமிழக முஸ்லிம் முகலாய ஜமாத் தலைவராக இருந்து கொண்டு சமூக பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறிய நசீம், சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் போது பல்வேறு நிவாரண பணிகளை மேற்கொண்டோம். இஸ்லாமியர்களுக்குரிய முக்கியத்துவம் இன்று அரசியலில் கிடைப்பதில்லை என்றார்.
விருகம்பாக்கம் தொகுதியில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் ஓட்டுக்கள் உள்ளன. ஆனால் இந்த தொகுதியில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் கூட முஸ்லிம் இல்லை. இதனால் சுயேட்சையாக இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன் என்றும் கூறினார்.
திப்புசுல்தானின் 18வது தலைமுறையைச் சேர்ந்தவன் நான். எங்கள் தலைமுறையினர் தமிழகம் முழுவதும் குடியிருக்கின்றனர். நிச்சயம் இந்த தொகுதியில் வெற்றிப் பெறுவேன் என்றும் நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
இவர் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் 30 ஆயிரம் ரூபாய் வங்கி இருப்பதாகவும், இருசக்கர வாகனம் லோனில் இருப்பதாகவும், மனைவி பர்வீனுக்கு 5 சவரன் நகை இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.