திருச்செந்தூர் ஆற்றுப்பாலத்தில் நேருக்கு நேர் மோதிய பஸ்கள்: 20 பேர் காயம்
திருச்செந்தூரில் இரண்டு தனியார் கல்லூரிப் பேருந்து நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் 15 மாணவிகள் உட்பட 20 பேர் காயமடைந்தனர்.
தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே ஆத்தூரில் இரண்டு தனியார் கல்லூரி பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 20 பேர் காயமடைந்தனர்.
திருச்செந்தூரில் பிரபல தனியார் பொறியியல் கல்லூரிக்குச் சொந்தமான பேருந்தில் தினமும் மாணவிகள் பயணம் செய்வது வழக்கம். இதே போல் தூத்துக்குடியில் பிரபல தனியார் பொறியியல் கல்லூரிக்கு சொந்தமான பேருந்திலும் மாணவிகள் சென்று வருவார்கள்.
ஆத்தூர் ஆற்று பாலத்தின் மீது இரண்டு கல்லூரி பேருந்துகளும் எதிர் எதிர் திசையில் வந்தன. போட்டி போட்டுக்கொண்டு, ஒதுங்காமல் வேகமாக வந்ததில் இரண்டு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டன.
இதில் இரண்டு பேருந்துகளின் முன் பாகமும் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 15 மாணவிகள் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து ஆத்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேருந்துகள் எதுவும் பாலத்திலிருந்து கீழே விழவில்லை. விழுந்திருந்தால் உயிர்சேதம் ஏற்பட்டிருக்கும் என்று சம்பவத்தைப் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.