திருச்செந்தூரில் சூரனை வதம் செய்த முருகன் ... அரோகரா முழக்க மிட்ட பக்தர்கள்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலில், கந்தசஷ்டியின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், இன்று மாலை நடைபெற்றது. இதைக் காண, காத்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு முருகனை வழிபட்டனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 3-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கந்தசஷ்டி திருவிழாவின் ஆறாம் நாளான இன்று மாலை சூரசம்ஹாரம் நடந்தது.
இதையொட்டி, கோயில்நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலை சுவாமி, கடற்கரையில் எழுந்தருளி, தன்னை எதிர்த்து போரிட்ட சூரனை "சம்ஹாரம்" செய்தார்.
நாளை, சுவாமி - அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது. இன்று மாலை சரியாக 5.58 மணியளவில் சூரசம்ஹாரம் நடந்தது. இதில் லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சஷ்டி விரதம்
ஐப்பசி மாதம் பிரதமை திதியில் இருந்து சஷ்டி வரை விரதம் இருந்து, சஷ்டியில் முருகனை தரிசனம் செய்து விரதத்தை நிறைவேற்றினால் ஆயிரமாயிரம் ஆண்டு தவம் செய்த பலனை பெறலாம் என்பது நம்பிக்கை.
சூரபத்மன் வரம்
யாராலும் வெல்ல முடியாது என்று வரம்பெற்ற சூரபத்மன் தேவர்களை துன்புறுத்தினான். அவர்கள், சூரபத்மனிடம் இருந்து தங்களை காப்பாற்றுமாறு பராசக்தியிடம் முறையிட்டனர். அதை ஏற்று பராசக்தி, முருகப் பெருமானுக்கு வேல் வழங்கி போர்க்களத்திற்கு அனுப்பி வைத்தார்.
6 நாட்கள் போர்
6 நாட்கள் போர் நடந்தது. இந்த சூரசம்ஹாரம் நடந்த இடம் திருச்செந்தூர் ஆகும். இதனை நினைவு கூறும் விதமாக ஆண்டுதோறும் கந்த சஷ்டி அன்று இங்கு கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
தலையை அசைக்கும் சூரன்
இதனைக் காண விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் யாகசாலை பூஜை முடிவடைந்ததும் கடற்கரைக்கு வந்து விடுவார்கள்.
முன்னதாக சிவக்கொழுந்தீஸ்வரர் கோவிலில் இருந்து புறப்பட்ட சூரன் திருச்செந்தூர் நகரில் ரத வீதிகளை தலையை அசைத்தபடி வலம் வந்தான். சூரன்முன்னே முரசு ஒலித்தபடி வந்தனர். சூரன் கடற்கரைக்கு வந்ததும் லட்சக்கணக்கான பக்தர்கள் சூரனும், முருகன் போர் செய்யும் காட்சியை காண ஒன்று திரண்டு நின்றனர்.
ஜெயந்தி நாதர்
இந்த வேளையில் ஜெயந்தி நாதர், வேல்தாங்கிய படைத் தலைவராக சப்பரத்தில் கடற்கரைக்கு கம்பீரமாக எழுந்தருளினார். போர் தொடங்கியதும் சூரனின் சப்பரம், ஜெயந்தி நாதரின் சப்பரத்தை வலம் வந்தது. பின்னர் சூரன் பல்லக்கு, ஜெயந்தி நாதர் பல்லக்குக்கு முன்பு 3 முறை சென்று பின் வாங்கி சென்றது.
இதைத் தொடர்ந்து ஜெயந்தி நாதரின் பல்லக்கில் இருந்து சூரனின் பல்லக்குக்கு பட்டாசு விடப்பட்டது. இது சூரனை சென்று தாக்கியது. சூரன் மொத்தம் 3 உருவங்கள் எடுத்து முருகனை எதிர்கொள்வான்.
யானை முகன்
முதலில் யானை முகன் எனும் உருவம் கொண்ட அசுரன் வலமிடமாக சாமியைச் சுற்றி வருவான். முருகன் சார்பாக அர்ச்சகர் அவன் நெற்றியில் குத்தி வீழ்த்தினார். சூரன் தனது தலை துண்டிக்கப்பட்டதும் வேறு தலையுடன் தோன்றி கொண்டே இருந்தான். அவனை ஜெயந்தி நாதர், வதம் செய்வதை பக்தர்கள் கண்டு களித்தனர்.
சிங்கமுகாசுரன்
இதைத் தொடர்ந்து உடலில் சிங்கமுகாசுரன் தலை பொருத்தப்பட்டது. சிங்கமுகன் நெற்றியிலும் வேலால் குத்தி வீழ்த்தினார்கள். அடுத்து சூரபத்மன் தலையை அதே உடலில் பொருத்தபட்டு சூரபத்மனும் வீழ்த்தப்பட்டான்.
மாமரமும், சேவலும்,
நான்காவதாக மாமரமும் சேவலும் சூரனின் உடலில் பொருத்தப்படவே மாமரம் வெட்டுண்டதும் சேவல் பறந்து போனது. அத்துடன் சூரசம்ஹாரம் முடிந்தது. இந்த போரின் போது பக்தர்கள் எழுப்பிய கந்தனுக்கு அரோகரா, குமரனுக்கு அரோகரா என்ற முழக்கம் விண்ணை அதிர வைத்தது.
திருக்கல்யாணம்
இதனைத் தொடர்ந்து 6 நாட்களாக சஷ்டி விரதம் கடைபிடித்த பக்தர்கள் கடலில் குளித்து விட்டு விரதத்தை முடித்து உணவு உட்கொண்டனர். சஷ்டிக்கு மறுநாள் (7-வது நாள்) தெய்வானை அம்மன் மாலை 6 மணிக்குப் புறப்பட்டு பூச்சப்பரத்தில் பவனி வந்து ஊருக்கு மேற்கே தெப்பக்குளத்தருகேயுள்ள நட்டாத்திப் பண்ணையார் மண்டபத்தை வந்தடைவாள்.
மாலை 3 மணிக்கு குமரவிடங்கப் பெருமான் பூச்சரப்பரத்தில் பவனி தெற்கு ரத வீதியின் மேற்கு கோடியில் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் தாம்பூலம் மாற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும்.
மஞ்சள் நீராட்டு விழா
அடுத்து மேலக்கோபுர வாயில் முன்புள்ள திருமண மண்டபத்தில் தெய்வானை திருமணம் இரவில் நடைபெறும். திருமண நிகழ்ச்சிகள் 5 நாட்கள் நடைபெறும். 8-ம் நாள் அன்று ஊர்வலமும், 9,10,11-ஆம் நாட்களில் ஊஞ்சல் சேவையும் நடைபெறும். 12-ம் நாள் திருவிழாவில் மாலை மஞ்சள் நீராட்டு நடை பெறும்.