திருச்செந்தூர்– பழனி பயணிகள் ரயில் பிப்.16 முதல் இயக்கம்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் பழனி இடையேயான பயணிகள் ரயில் வரும் 16ம் தேதி முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளும், ஆன்மீக பக்தர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த ரயில்வே பட்ஜெட்டில் திருச்செந்தூர்- பழனி இடையே பயணிகள் ரயில் அறிவிக்கப்பட்டது. இந்த ரயிலுக்கான கால அட்டவணை கடந்த ஜூலை 1ம் தேதி வெளியானது.
அதன்படி பழநி - திருச்செந்தூர் பயணிகள் ரயில் சேவை தொடக்க விழா வரும் 16ம் தேதி பழனியில் நடக்கிறது.தினமும் காலை 7.45 மணிக்கு பழநியில் இருந்து புறப்பட்டு மாலை 4 மணிக்கு திருச்செந்தூர் வரும். மறுமார்க்கத்தில் காலை 10 மணிக்கு திருச்செந்தூரில் புறப்பட்டு இரவு 7.10க்கு பழநி சென்றடையும்.
ஆன்மீக தலங்கள்
தமிழகத்தின் ஆன்மிக சுற்றுலா தலங்களை இணைக்கும்படியான ரயில்கள் இதுவரை இல்லை. கன்னியாகுமரி - ராமேஸ்வரம் உள்ளிட்ட சில பகுதிகளுக்கு மட்டும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
பழனி - திருச்செந்தூர்
இந்த நிலையில் முருக கடவுளின் அறுபடை வீடுகளை இணைக்கும் வகையில் திருச்செந்தூரிலிருந்து பழனிக்கு ரயில் விட பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
பயணிகள் ரயில்
அதன் அடிப்படையில் கடந்த பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி பழனி - திருச்செந்தூர் பயணிகள் ரயில் (எண் 56769) தினமும் காலை 7.45 மணிக்கு திருச்செந்தூர் வந்து சேரும். அதுபோல் திருச்செந்தூர் - பழனி ரயில் (எண் 56770) தினமும் காலை திருச்செந்தூரிலிருந்து புறப்பட்டு இரவு 7.10 மணிக்கு பழனிக்கு சென்றடையும்.
ரயில்கள் நிற்கும் இடங்கள்
இந்த ரயில் சர்க்கரைபட்டி, ஓட்டன்சத்திரம், கொடைக்கானல் ரோடு, சோழவந்தான், மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, கடம்பூர், வாஞ்சி மணியாச்சி, நாரைக்கிணறு, தாழையூத்து, நெல்லை ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
பக்தர்கள் மகிழ்ச்சி
வரும் 16ம் தேதி இந்த ரயில் சேவை தொடக்க விழா பழனியில் நடக்கிறது. இந்த ரயிலுக்கான பெட்டி கடந்த இரு மாதங்களாக நெல்லை ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் முருக பக்தர்களும், பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.