மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர்... பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்
திருச்செநதூர்: திருச்செந்தூர் அரசு பள்ளியில் மாணவிகளிடம் ஆசிரியர் ஒருவர் தவறாக நடக்க முயன்றாக கூறி மாணவிகளின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்செந்தூரில் செந்தூர் முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அங்குள்ள ஒரு ஆசிரியர் 12ம் வகுப்பு மாணவிகளிடம் தவறாக ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் சம்பந்தப்பட்ட ஆசிரியரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என மாலை பள்ளியை முற்றுகையிட்டனர்.
இதில் 12ம வகுப்பு மாணவிகளும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் த.மா.கா. நகர தலைவர் வேலாயுத பெருமாள், இலக்கிய அணி மாவட்ட பொறுப்பாளர் செண்பகராமன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட கல்வி அதிகாரி (பொறுப்பு) சின்னராசு, திருச்செந்தர் இன்ஸ்பெக்டர் பத்மநாபன்பிள்ளை, தலைமை ஆசிரியை மார்கரெட் ஆகியோர் மாணவிகள் மற்றும் பெற்றோர்களை சமாதானப்படுத்தினர்.
இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்ததை தொடர்ந்து மாணவிகளும், அவர்களது பெற்றோரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.