கந்த சஷ்டி விழாவிற்கு தயாராகும் திருச்செந்தூர்: நவ.12ல் கொடியேற்றம் - 17ல் சூரசம்காரம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா நவம்பர் 12ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்காரம் நவம்பர் 17ம் தேதி நடைபெற உள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் 7 நாட்கள் கந்தசஷ்டி விழா வெகு விமரிசையாக நடைபெறும். ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வந்து விரதமிருந்து சூரசம்காரம் முடிந்த உடன் விரதத்தை முடிப்பார்கள்.
இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா நவம்பர் 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடை பெறும். நவம்பர் 13ம் தேதியில் இருந்து 16ம் தேதி வரை அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்படும்.
நவம்பர் 17ம் தேதி அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், அதிகாலை 2 மணிக்கு உதயமார்த் தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மற்ற கால பூஜைகளும் நடைபெறும். அன்று மாலை 4.30 மணிக்குமேல் சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளது. மறுநாள் 18ம் தேதி இரவு திருக்கல்யாண வைபவமும் நடைபெறும்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார்
கந்தசஷ்டி திருவிழாவில் ஏறத்தாழ 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதாரம், மின்சார வசதி, போக்குவரத்து வசதி ஆகியவற்றை முறையாக வழங்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் கடல் பாதுகாப்பு வளையத்துடன் தீயணைப்புத் துறையினரும், உயிர் மீட்பு படகுடன் மீன்வளத் துறையினரும் ஈடுபடுத்தப்படுவார்கள். மேலும், தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில் சுகாதாரத் துறையினர் திருக்கோயில் வளாகத்தில் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆம்புலன்ஸ்கள் மற்றும் அவசர மருத்துவ சிகிச்சை பெறும் வசதியுடன் மருத்துவர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவர். தீயணைப்புத் துறையினர் முழுமையாக தண்ணீர் நிரப்பப்பட்ட தீயணைப்பு ஊர்தியைத் தேவையான இடங்களில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். நெடுஞ்சாலைத் துறை மூலம் தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலை தாற்காலிகமாக சீரமைக்கப்படும்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும், மூன்று தாற்காலிகப் பேருந்து நிறுத்தங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.