நெல்லை-திருச்செந்தூர் இடையே புதிய ரயில் - பயணிகள் மகிழ்ச்சி
நெல்லை: நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு புதிய ரயில் இயக்கப்பட உள்ளது. இதனை வரும் 9ஆம் தேதி மத்திய அமைச்சர் கொடியசைத்து துவக்கிவைக்கிறார்.
திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு தற்போது இயக்கப்படும் ரயில்களை தவிர புதிதாக ஒரு ரயில் அறிமுகப்படுத்தப்படுகிறது. வரும் 9ம் தேதி திங்கள்கிழமையன்று திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படுகிறது. இதனை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, டெல்லியில் இருந்தபடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் துவக்கிவைக்கிறார்.
இந்த ரயில் 56035 காலை 10.25 மணிக்கு திருச்செந்தூரில் கிளம்பி பகல் 12.15 மணிக்கு நெல்லையை வந்தடையும். நெல்லையில் இருந்து 56036 ரயில் பிற்பகல் 3.15 மணிக்கு கிளம்பி மாலை 5.15 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும்.
வரும் 10ஆம் தேதியில் இருந்து தினமும் இயக்கப்படுகிறது. புதிய பயணிகள் ரயில் இயக்கப்பட உள்ளதற்கு பக்தர்களும், பயணிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
பயணிகள் ரயில்கள்
நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு தினமும் காலை 6.50, 9.45, பகல் 11.20, மாலை 6.35 ஆகிய நேரங்களில் திருச்செந்தூருக்கு ரயில் இயக்கப்படுகிறது.
இது போல் சென்னையிலிருந்து வரும் செந்தூர் எக்ஸ்பிரஸ் தினமும் காலை 6.10 நெல்லையிலிருந்து புறப்பட்டு திருச்செந்தூருக்கு செல்கிறது. இந்த ரயில் இரவு சென்னைக்கு 7.45க்கு திருச்செந்தூரிலிருந்து புறப்பட்டு நெல்லைக்கு வந்து செல்கிறது.
ரயில் பெட்டிகள் சர்வீஸ்
இந்த நிலையில் பகலில் திருச்செந்தூரில் இறக்கிவிடப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் சர்வீஸ் செய்வதற்காக உடனடியாக நெல்லைக்கு கொண்டு வரப்பட்டு மாலை மீண்டும் திருச்செந்தூருக்கு கொண்டு செல்லப்படுகிறது. சுமார் 120 கிலோ மீட்டர் தூரம் வெறும் பெட்டிகளுடன் திருச்செந்தூர் ரயில் செல்வதால் ரயில்வே துறைக்கு நஷ்டம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
பயணிகள் மகிழ்ச்சி
இதையடுத்து அதில் அந்த நேரங்களில் பயணிகளை ஏற்றி செல்லலாம் என பயணிகள் யோசனை கூறியதை அடுத்து திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் பயணிகளை இருமுனையிலும் ஒரு முறை பயணிகளை ஏற்றி செல்லும். இதன் மூலம் நெல்லை-திருச்செந்தூர் இடையே மேலும் ஒரு ரயில் கிடைத்து இருக்கிறது. அதோடு படுக்கை வசதியும் கிடைத்துள்ளது என்பதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.