திமுக மாஜி அமைச்சர் திருச்சி செல்வராஜ், தமாகாவின் எஸ்.ஆர்.பி, அதிமுகவில் இணைந்தனர்
சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் திருச்சி செல்வராஜ், தமாகாவில் இருந்து விலகிய மூத்த தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் ஆகியோர் சென்னை போயஸ் கார்டனில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளனர்.
திருச்சி மாவட்ட திமுகவில் கே.என்.நேருவுக்கு போட்டியாக அரசியல் செய்து வருபவர் என்.செல்வராஜ். நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் தனக்கு மண்ணச்சநல்லூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கும்படி விருப்ப மனு அளித்திருந்தார். ஆனால், அந்த தொகுதிக்கு நேருவின் ஆதரவாளரான கணேசன் அறிவிக்கப்பட்டார்.
இது செல்வராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. வேட்பாளரை மாற்ற வலியுறுத்தி முசிறி, மண்ணச்சநல்லூர், அய்யம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செல்வராஜ் ஆதரவாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இதற்கிடையே, சென்னையில் கட்சியின் மூத்த தலைவர்கள், முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்து செல்வராஜ் முறையிட்டார். ஆனால், அவருக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து, அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் பரவியது. சில தினங்களுக்கு முன்பு திருச்சிக்கு வந்திருந்த மு.க.ஸ்டாலினை சந்திக்காததோடு பிரச்சாரத்திலும் பங்கேற்கவில்லை.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி செல்வராஜ், அரசியலில் என்னைப் புறந்தள்ள வேண்டும், அவமானப்படுத்த வேண்டும் என்ற முனைப்போடு கே.என்.நேரு செயல்பட்டு வருகிறார். அவர் அளித்த தகவல்களை நம்பி திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும் என் மீது வெறுப்பை உமிழ்வதாக கூறினார்.
மண்ணச்சநல்லூர் தொகுதி வழங்கப்படாதது குறித்து கடந்த 14ம் தேதி ஸ்டாலினை நேரில் சந்தித்து முறையிட்டேன். அப்போது, 2019ல் நடைபெறும் எம்பி தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம் என பதிலளித்தார். அதே போல அரசியலிலும் நான் தொடர விரும்புகிறேன். என்ன முடிவு எடுப்பது எனத் தெரியாமல் குழப்பத்தில் உள்ளேன். ஆனாலும், முடிவெடுத்தே ஆக வேண்டிய நேரம் இது என்றும் கூறினார். இதனிடையே ஜெயலலிதாவின் இல்லத்துக்கு இன்று மதியம் வந்த திமுக முன்னாள் அமைச்சர் திருச்சி செல்வராஜ், முதல்வரை சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.
எஸ்.ஆர். பாலசுப்ரமணியம்
இதேபோல தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் எஸ்.ஆர். பாலசுப்ரமணியமும் இன்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார். ஜி.கே.வாசன் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்று தமாகாவை ஆரம்பித்த போது உடன் சென்றவர் எஸ்.ஆர். பாலசுப்ரமணியம். சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமாகா இணைய வேண்டும் என்று வாசனை வலியுறுத்தினார். ஆனால் வாசன் மக்கள் நலக்கூட்டணியுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்கிறார்.
இதனால் அதிருப்தியடைந்த பீட்டர் அல்போன்ஸ், எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் ஆகிய தலைவர்கள் தமாகாவில் இருந்து விலகினர். பீட்டர் அல்போன்ஸ் தாய் கட்சியான காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் அதிமுகவில் சேரப்போவதாக கூறப்பட்டது. இதனை மறுத்தார் எஸ்.ஆர். பாலசுப்ரமணியம். இந்த நிலையில் ஜெயலலிதாவை இன்று போயஸ்கார்டனில் சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில், திமுக, தமாகா கட்சிகளின் மூத்த தலைவர்கள் அதிமுகவில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.