திருப்பதி பிரம்மோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்- பக்தர்கள் குவிகின்றனர்
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசித்தி பெற்ற பிரம்மோற்சவ விழா நாளை சனிக்கிழமை தொடங்குகிறது.
திருப்பதி: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா நாளை சனிக்கிழமை தொடங்கி அக்டோபர் 1 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையோடு பிரம்மோற்சவமும் தொடங்குவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்து வருகின்றனர்.
திருப்பதி திருமலை ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் நாளை பகலில் கருடக்கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது.
பிரம்மோற்சவத்தின்போது ஒவ்வொரு நாளும் மலையப்ப சுவாமி ஒவ்வொரு வாகனத்தில் பவனி வருவார்.
மலையப்பசாமி நான்கு மாட வீதிகளில் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் எழுந்தருள்வதை காண கண்கோடி வேண்டும்.
மலையப்பசாமி வீதி உலா
23 ஆம் தேதி இரவு பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி நான்கு மாட வீதிகளில் பவனி வருகிறார். 24ஆம் பகலில் சிறிய சேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி அலங்காரத்துடன் பவனி வருகிறார். 24ஆம் தேதி இரவில் ஹம்ஸ வாகனத்தில் மலையப்பசுவாமி அலங்காரத்துடன் பவனி வருகிறார்.
அலங்கார ரூபமாய் காட்சி தரும் இறைவன்
25 ஆம் தேதி பகலில் சிம்ம வாகனத்தில் சுவாமி பவனி வருகிறார். 25ஆம்தேதி இரவில் முத்துப்பந்தல் வாகனத்தில் மலையப்ப சாமி வலம் வருகிறார். 26 ஆம் தேதி பகலில் கற்பக விருட்ச வாகனத்தில் ஶ்ரீதேவி பூதேவி சமேதராக மலையப்ப சாமி பவனி வருகிறார். 26ஆம்தேதி இரவு சர்வ பூபால வாகனத்தில் சுவாமி பவனி வருகின்றார். 27ஆம் தேதி பகலில் மோஹினி அவதாரமாக காட்சி தருவார்.
கருட வாகனம்
27ஆம்தேதி இரவு பெரிய திருவடி என்னும் கருட வாகனத்தில் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார் மலையப்பசுவாமி. இந்நாளில் மட்டும் 3 லட்சம் முதல் 5 லட்சம் பக்தர்கள் வரை வந்து சுவாமியை தரிசனம் செய்வார்கள்.
ஹனுமந்த வாகனம்
28ஆம் தேதி பகலில் சிறிய திருவடி ஹனுமந்த வாகனத்தில் வில் அம்புடன் சுவாமி பவனி வருகிறார். 28ஆம் தேதி இரவில் கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி வருகிறார்.
சூரிய பிரபை - சந்திரபிரபை
29ஆம்தேதி பகலில் சூரியபிரபை வாகனத்தில் பவனி வருகிறார். சூரியபிரபையின் ஒளிக் கதிர்களுக்கிடையே சூரிய நாராயணனாக வேங்கடவன் எழுந்தருளுகிறார். 29ஆம் தேதி இரவில் சந்திர பிரபை வாகனத்தில் பெருமாள் பக்தர்களுக்குக் காட்சி தருகிறார்.
தேரோட்டம்
30ஆம் தேதி சனிக்கிழமை பகலில் திருத்தேரில் சுவாமி பவனிவருகிறார். 30ஆம் தேதி சனிக்கிழமை இரவில் குதிரை வாகனத்தில் பவனி வருகிறார். அக்டோபர் 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீர்த்தவாரி நடைபெறுகிறது.
லட்சக்கணக்கான பக்தர்கள்
திருமலையில் கோயிலுக்கு அருகே இருக்கும் சுவாமி புஷ்கரணியில் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நிறைவடைகிறது. பிரம்மோற்சவம் நடைபெறும் இந்த ஒன்பது நாட்களும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.