திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரை சுரங்கபாதையில் மே 14 ல் மெட்ரோ ரயில் சேவை
சென்னையில், திருமங்கலம் முதல் நேருபூங்கா வரை மே 14 முதல் மெட்ரோ ரயில் சேவை துவங்க உள்ளது.
சென்னை: சென்னையில், திருமங்கலம் முதல் நேருபூங்கா வரை உள்ள வழித்தடத்தில் ஞாயிறு முதல் மெட்ரோ ரயில் சேவை துவங்க உள்ளது. துவக்க விழாவில் முதல்வர் பழனிசாமி, மத்திய அமைச்சர் வெங்கையாநாயுடு உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
சென்னையில் இரு வழித்தடங்களில் மொத்தம் 45 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 19 ரயில் நிலையங்களுடன் 24 கி.மீ. சுரங்க வழிப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
உயர்த்தப்பட்ட பாதையில் விமான நிலையம் - சின்னமலை - கோயம்பேடு இடையே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரை ஒரு வழிதடத்தில் இயக்கப்படுகிறது.
கோயம்பேடு - நேரு பூங்கா
கோயம்பேடு - நேரு பூங்கா வரையிலான முதலாவது மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை பணி முடிவடைந்து கடந்த சில மாதங்களாக சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. சுரங்கப் பாதையில் ஆய்வு மேற்கொண்ட தெற்கு மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் மெட்ரோ ரயில்களை இயக்க ஒப்புதல் அளித்துள்ளார்.
சுரங்க பாதையில் ரயில்
இதில் 7.63 கி.மீ., தூரம் வரை சுரங்க பாதையில் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் உள்ள திருமங்கலம், அண்ணா நகர் டவர், அண்ணாநகர் கிழக்கு, ஷெனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம் ஆகிய 6 சுரங்க ரயில் நிலையங்கள் உள்ளன.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
டிக்கெட் கவுன்ட்டர், குடிநீர், கண்காணிப்பு கேமராக்கள், காற்றோட்ட வசதி, தானியங்கி சிக்னல், தீ மற்றும் புகையை அணைத்தல் உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த பகுதியில் ரயில் கட்டணம் ரூ.40 ஆக நிர்ணயம் செய்யப்படும் எனக்கூறப்படுகிறது.
மே 14ல் ரயில் இயக்கம்
வரும் 14 ஆம் தேதி சுரங்கவழி மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடக்கவிழாவில் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். தமிழகத்தில் மிக நீண்ட சுரங்கப்பாதை என்பதால் சென்னைவாகிகள் இதில் பயணம் செய்ய மக்கள் ஆர்வமாக உள்ளனர்.